21 December 2006

புலன்களின் ஏக்கம்

உன்னை காண்கையில்
கண்களில் ஒரு
மின்னல்.

முத்தமிடுகையில்
இதழ்களில் நல்ல‌
அமிழ்தத்தின் சுவை.

நினைக்கையில்
புத்தியில் சிறு
பரபரப்பு.

உன் மொழி கேட்டாலே
உச்சி முத‌ல்
உள்ள‌ங்கால் வ‌ரை
ஒரு சிலிர்ப்பு.

என‌க்கு ம‌ட்டும் சக்தியிருந்தால்
புல‌ன்க‌ளை எல்லாம் பெருக்கிக்கொள்வேன்

காதுக‌ள் பெரிதாகி போக‌ட்டும்;
உனது மொழி ம‌ட்டுமே கேட்கட்டும்.

க‌ண்க‌ள் நான்காய் பெருக‌ட்டும்;
எங்கெங்கும் உன் காட்சியே தெரிய‌ட்டும்.

நினைவின் ஆற்ற‌ல் இன்னும் விரிய‌ட்டும்;
நினைவுக‌ள் யாவும் உன‌தாக‌வே இருக்க‌ட்டும்.

த‌மிழே
அன்றும் இன்றும் என்றென்றும்
என்னிதயம் உன்னையே காத‌லிக்கும்;
நீய‌ல்லாது போனால்
என்றன் புத்தி பேத‌லிக்கும்!

-பிரேம்குமார்

20 December 2006

சிவப்பதிகாரம் - பாடல்களின் விமர்சனம்

Sivapathikaram

படத்தை பற்றி விமர்சனம் செய்து ஏற்கனவே நிறைய வலைப்பதிவுகள் வந்துவிட்டன. ஆக, நமக்கு அந்து வேலை வேண்டாம். ஆனா, அழகா இசையமைக்கப்பட்டு அவ்வளவாய் கவனிப்பாரற்று போன பாடல்களை பற்றி சொல்ல வேண்டாமா?

சித்திரையில் என்ன வரும்
*************************

'அப்படி ஓர் ஆணழகன், என்ன ஆள வந்து பேரழகன்' என மாலையம்மாவின் சுத்தமான் கிராமிய குரலில் அட்டகாசமாய் தொடங்குகிறது பாடல். அதே மெட்டில் தொடரும் 'சித்திரையில் என்ன வரும்' அற்புதமான மெலடி. சுவர்ணலதாவின் குரலும் கார்த்திக்கின் குரலும் அழகாய் வந்திருக்கிறது. படமாக்கிய விதத்திலும் குறையொன்றுமில்லை. பாடல் எடுக்கப்பட்ட இடமும், காட்டபட்ட இதமான காதலும் அழகு

அற்றைத் திங்கள் வானிடம்
**************************
கேட்க கேட்க சலிக்காத பாடல். நல்லதொரு காதல் பாட்டு. சுஜாதாவும் மது பாலாகிருஷ்ணனும் நன்றாகவே உருகியிருக்கிறார்கள். ஆனால் படத்திலோ இப்பாடல் கதா நாயகியை குளிக்க வைக்கவும், உருள வைக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது

பொறந்திருச்சு காலம் பொறந்திருச்சு
*********************************
இவ்வளவு சுத்தமான அழகான கிராமிய பாடலை கேட்டு எத்தனை நாட்கள் ஆகிவிட்டது. வயக்காட்டில் நடக்கும் சம்பவங்களும், அதில் நடக்கும் காதல்களும் அழகாக பாட்டில் வந்திருக்கிறது. நகரத்தில் உட்கார்ந்திருக்கும் பலருக்கு (என்னையும் சேர்த்து தான்) இந்த பாட்டில் உள்ள சந்தோஷங்கள் புரிபடாமல் போகலாம். படமாக்கிய வித்த்தில் பழுதில்லை, எனினும் பெரிதாக கவரவுமில்லை என்பது உண்மை.

மன்னார்குடி கலகலக்க‌
********************
ரொம்ப நாள் ஆச்சுப்பா, மனதையும் கால்களையும் ஆட்டுவிக்கும் ஒரு அருமையான குத்துப்பாட்டு வந்து! வரிகளிலும் அவ்வளவாக விரசம் இல்லை. மாணிக்க விநாயகமும், ராஜலட்சுமியும் நன்றாகவே குத்தை குத்தியிருக்கிறார்கள்.
பாடலை படமாக்கிய விதம்.... சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. ஆபாசம், அசிங்கம்... வலைப்பூவில் இதற்கு மேல் சொல்ல முடியாது.
இது விஷாலின் அறிமுகப்பாடல் வேறு. ஆனால், அந்த இரண்டு பெண்மணிகளைவிட (?!!) விஷாலின் நடனம் எவ்வளவோ மேல். பக்கத்தில் அவ்வளவு அருவருப்பாக ஒருவர் ஆடும் போது, அதையும் மீறி அவர் ஆடுகிறார் என்றால் அவரை பாராட்டத்தானே வேண்டும்

அட சந்திர சூரிய‌
*****************
குரல்களில் என்னென்ன வகைகள் இருக்கிறது என எடுத்துக்காட்டோடு சொல்கிறார் பேராசிரியர்.குணசேகரன். ஒவ்வொரு வகை குரலிலும் ஒரு பாட்டு. இசைத்தட்டிலே கேட்பதற்கு நன்றாகவே இருக்கும் அப்பாடல்கள் ஏனோ படத்திலே நீளளளள‌மாக இருக்கிறது.

மாரி மகமாயியம்மா
********************
மதுரை சின்னப்பொண்ணு'வின் குரலில் ஒலிக்கும் நல்லதொரு கும்மிப்பாட்டு. பாட்டின் வரிகளை கேட்டால், 'அட, நம்ம கிராமிய பாடல்களில்தான் என்ன ஒரு அழகும், வார்த்தை ஜாலங்களும் இருக்கிறது' என் கண்டிப்பாக தோன்றும். பாடலில் வேகம் கூட கூட, பாடலின் போக்கோடு உள்ளுக்குள்ளேயே கும்மியடிக்கிறது மனம் (சின்ன வயதில் தேவகோட்டையில், மாரியம்மன் கோவிலில் கும்மியடித்ததை நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை).
ஆனால், படத்திலே கும்மியடிப்பதை பார்க்க பலருக்கு பொறுமையில்லை (அதுவும், போரம், அரங்கில் உட்கார்ந்து பாத்துக்கொண்ருந்த இளம் மென்பொறியாளர்களின் கூக்குரல் தான் பாடலை மீறி கேட்டது)

(டேய் மாப்ள, வெள்ளிக்கிழமை அதுவுமா ரூம்லேயே சரக்கடிச்சிட்டு வழக்கம் போல் கும்மியடிச்சிக்கிட்டு இருந்திருக்கலாம்.. இப்படி படுத்திட்டியே என நண்பர்களின் குரல் கேட்டபடியே இருந்தது)

அட இவ்வளவும் சொல்லிவிட்டு வித்யாசாகரை பற்றி ஒரு வரி கூட எழுதாமல் விட்டால் எப்படி? சுருக்கமாக சொன்னால் ' நல்லதொரு இசைத்தொகுப்பு'. வாழ்த்துக்கள் வித்யாசாகர்

உனக்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை என நீங்கள் கேட்கலாம். என்னவோ ஒவ்வொரு முறை இப்பட பாடல்களை கேட்கும் போதும், கண்டிப்பாக இதை பற்றி ஒரு பதிவு போடனும் என்று பட்சி சொல்லிக்கிட்டே இருந்தது.. அந்தா இந்தான்னு இழுத்து கடைசியில் பதிவு செய்துவிட்டேன்

13 December 2006

சொல்லாமலே

தொட‌க்கமோ,முடிவோ;
ஏதோவொன்று
பிடிபடாததால்
ம‌ன‌திலேயே த‌ங்கிவிட்ட‌ன‌
ப‌ல‌ க‌விதைக‌ளும்
சில‌ காத‌ல்க‌ளும்

- பிரேம்குமார்

11 December 2006

இதயங்கள்

அரளிப்பூ மேனியாளின்
ஆர்ப்பாட்ட அழகாலே
அவசரமாய்க் காதலுற்றேன்
அவளிடமே முறையிட்டேன்

சேதி கேட்ட சிறுக்கி
ரொம்பத்தான் முறுக்கி
"அதெல்லாம் முடியாது - என்
அன்புனக்காய் வடியாது."
அதரம் திரட்டினாள்
அதட்டி விரட்டினாள்

"நீயில்லாதென் வானம்
எங்ஙன‌ம் விடியும்?
என் இளமைத்தவம்
எக்கணம் முடியும்?!"
புலம்பித் தவித்தேன்
புழுவெனத் துடித்தேன்

தையலோ யோசித்து
வழியொன்றை விளம்ப,
மையலோ அதற்கென்னை
மண்டையாட்ட வைத்தது

'நாதா, நீ சென்றோடி
உனையீன்றெடுத்த உன்
மாதா மார் பிளந்தவள்
இதயம் கொணர்ந்து
பரிசாய்க் கொடுத்தால்
பரிசீலிக்கலாம்'

கேட்ட நொடியில்
நான் செத்திருக்க வேண்டும்
அல்லால் அக்க‌ண‌மே
அவளுயிரை அத்திருக்க வேண்டும்

மதி கெட்ட நானோ
மனை தேடியோடினேன்
விதியோ சதியோ
மாதாவைக் கொன்றாடினேன்

இதயங் கையிலேந்தி
வாயிற்கதவு தாண்டுகையில்
அடிதப்பி விழுந்தேன்.
தாயினிதயம் அப்போதும்
துடிதுடித்து கேட்டது

'மடியாடிய செல்வமே
பார்த்து செல்லடா
அடியேதும் இல்லையே,
பார்த்து சொல்லடா'

அன்னையின் அன்பை
அப்போது உணர்ந்தேன்;
மதியற்ற செயலெண்ணி
மனம் நோந்தொடிந்தேன்

- பிரேம்குமார்

***பழைய கதையொன்று கவிதை வடிவத்தில்

27 November 2006

திருக்குறள் கவிதைகள்

664. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.


(திருக்குறள் - பொருட்பால் - அமைச்சியல் - [67]வினைத்திட்பம்)


பொறுமையின்
புகழுரைக்கும்
அரைப்பக்க கட்டுரையை
முடிக்கும் முன்னே,
எழுத அடம் பிடித்த‌
பேனாவை,
விசிறியடித்த‌து
முன்கோபம்.

எனக்குள் ஒருவன்

பிட்சாவையும் பர்கரையும்
சுவைக்கயிலும்
அம்மா வைக்கும்
க‌ருவாட்டுக் குழ‌ம்பை
நினைத்து
நா ஊறுகையில்;

அழுக்கு ஜீன்ஸை
ஆயிர‌ம் ரூபாய்க்கு
வாங்கிவிட்டு
ஆட்டோக்கார‌னிட‌ம்
ஐம்பது பைசாவுக்கு
சண்டையிடுகையில்;

சாலையோர‌
சல்வாரையும் மிடியையும்
ரசித்துவிட்டு
சகோதரிக்கு மட்டும்
சேலையை தேர்ந்தெடுக்கையில்;

அவ்வப்போது
எட்டிப்பார்த்து விடுகிறான்
மென்பொறியாளன்
போர்வைக்குள்ளிருக்கும்
கிராம‌த்தான்!

21 November 2006

தேடல்

தேடித் தவங்கிடக்கையில்
சிக்காது,
ஏதோ ஒரு
மௌன கணத்தில்
வந்தடைந்து
வியப்பூட்டும்
கவிதையும்
காதலும்!

14 November 2006

தெருக்குரல்

மெயிலும் வேலையும் இரு கண்ணாம்
மென்பொருள் தொழில் புரிபவர்க்கு

10 November 2006

க‌ட‌லை போட்டுப்பார்

'காதலித்துப்பார்'க்க சொன்னார் வைரமுத்து. கடலை போட்டுப்பார்த்தால் எப்படியிருக்கும்?

க‌ட‌லை போட்டுப்பார்

உன்னை நீயே
அழகாய் காண்பாய்;

பேச்சில் சுவை கூடும்
ரசனைகள் மாறும்

அவ‌ச‌ர‌மாய் ஆங்கில‌ம்
க‌ற்பாய்;
அக‌ராதி துணையுட‌ன்
அகதா கிறிஸ்டி படிப்பாய்.

க‌ட‌லை போட்டுப்பார்!!

*

இர‌வுக்கும் ப‌க‌லுக்கும்
வித்தியாச‌ம் ம‌றப்பாய்;

மனிதத் தனிமை
சுகமென்பாய்,
தொலைபேசி துணையில்
இன்புறுவாய்.

செல்பேசிச் சூட்டிலே
வார்த்தைகள் உருகும்
குறுந்த‌கவ‌ல் அனுப்பியே
க‌ட்டைவிர‌ல் தேயும்.

க‌ட‌லை போட்டுப்பார்!!

*

நாளின் நீள‌ம்
குறைவென்பாய்
பத்து நிமிட அலுவலும்
பளுவாய் படும்.

காத‌ல் பாட‌ல்க‌ள்
மட்டுமே இசையாகும்;
க‌விதை எழுத
புறப்ப‌டுவாய்.

ஆள் பாதி,
ஆடை பாதி;
மேன்மையான‌ நீதியென்று
மெனக்கெடுவாய்.

க‌ட‌லை போட்டுப்பார்!!

அமாவாசை

வானின் இளவரசி
காணாமல் போனாளோ??
வானவீதியெங்கும்
விளக்கேந்திய சிப்பாய்கள்!!

ப‌ட‌ப‌ட‌ப்பு

உன் அருகாமை
த‌ரும் அவ‌ஸ்தையில்
படபடக்கிறது
உன் துப்பட்டாவும்,
அது தீண்டி போன
என் மனமும்.

9 November 2006

காதல் மழையே

நண்பர் அஜய் அமைத்த மெட்டுக்கு எழுதிய பாட்டு. இது தான் முதன் முதலில் ஒரு மெட்டுக்கு எழுதிய முழுமையான பாடல்.

கவிதைகளில் உள்ள சுதந்திரம் இல்லை இதில்... எனினும் பாட்டிற்கான களமும் மெட்டும் சில சமயங்களில் வரிகளை பிடித்துக்கொண்டு தந்து விடுகின்றன. இதுவும் சுவையான ஒரு அனுபவமாகவே இருந்தது

பாட்டு வடிவம்

காதல் மழையே
என்னை தீண்டிப் போ
உந்தன் சாரல் வழியே
உயிரை நனைத்து போ

உடலை தீண்டி போனால்
மழையாய் மட்டும் நினைத்திருப்பேன்
உயிரை தீண்டி போனாலோ நீ
காதல்

உடலை தீண்டி போனால்
மழையாய் மட்டும் ரசித்திருப்பேன்
உயிரை தீண்டி போனாலோ
காதல்
என் காதல்
உயிர் காதல்

என் காதலான மழையே
என்னை தீண்டிப் போ
உந்தன் தூரலின் வழியே
உயிரினை நனைத்துப் போ

விண் வழியே எனைக் காண ஒடோடி வாராயொ
பெண் நனைய ஒரு கோடி நீர்த்தூவி நில்லாயோ

எனை மீட்டிப் போகவும்
உயிரூட்டிப் போகவும்
உடல் எங்கும்
நிறம் தீட்டிப் போகவும்
பேறு பெற்றது நீ தானே

சிலிர்ப்பூட்டி என்னில்
தீமூட்டி போகவும்
பேறு பெற்றது நீ மட்டுமே

கவிதை வடிவம் :

காதல் மழையே
என்னை தீண்டி போ
உந்தன் சாரல் வழியே
உயிரை நனைத்து போ

உடலை மட்டும் தொட்டுப் போனால்
மழையாய் மட்டும் ரசித்திருப்பேன்
உயிரை தொட்டு விட்டுப் போனாலோ
காதலாய் நினைத்திருப்பேன்

விண் வழியே எனை காண
ஓடி வ‌ந்த பெரும‌ழையே - இந்த‌
பெண் நனைய ஒரு கோடி
நீர்த்தூவும் நறுமழையே

எனை மீட்டிப் போகவும்
உயிரூட்டிப் போகவும்
மேனி எங்கும்
நிறம் தீட்டிப் போகவும்
பேறு பெற்றது நீ தானே

சிலிர்ப்பூட்டி என்னில்
தீமூட்டிப் போகவும்
பேறு பெற்றது நீ மட்டுமே

என் காதலான மழையே
என்னை தீண்டி போ
உந்தன் தூரலின் வழியே
உயிரினை நனைத்து போ

7 November 2006

தேவதை

கதவு திறந்து
தேவதையாய் நீ
புகுந்துபோது தான்
அலுவலகம் கோவில் போன்றது
என்பதன்
பொருள் விளங்கிற்று.

மனநிலை

நீயும்
பாலைவ‌ன வானிலை
போல‌த்தான்.
சுட்டாலும்
மெய்க‌ருக‌ சுடுவாய்;
பொழிந்தாலும்
உயிர் நனைய பொழிவாய்.

16 October 2006

பரிசு

ஊருக்கெல்லாம்
வரமளிக்கும்
ஏழை சாமியை போல;
என் காதலுக்கு மட்டும்
மௌன‌த்தை நீட்டும்
காதல் கவிஞன் நான்.

14 October 2006

"என்னவென்பதாம்??"

உன்னால் கவிதை
படைக்கும்
நான் கவிஞனெனில்
உன்னை படைத்த
உன் பெற்றோரை
என்னவென்பதாம்??

"நீயில்லாமல்…"

பேருந்துக்கான
நீண்ட காத்திருப்பும்,

பெருங்கூட்டத்திலும்
உறுத்தும் தனிமையும்,

பக்கத்து இருக்கையின்
பரிச்சயமில்லா முகமும்,

நெடும் பயணத்தில்
நெருடும் அமைதியும்,

நீயில்லாத வெறுமையை
வெகுவாய் குத்திக்காட்டுகிறது.

"மழை தருமோ மேகம் ?!"

நீ கூந்தல் துவட்ட,
என் மேல்
தெறித்த
நீர்த்துளிகள் தான்
உறுதி செய்தன
மழை மேகம் கருப்பென்பதை.

"மாயம்"

எத்தனையோ காலமாய்
இதே வழியில்
பயணித்திருந்தாலும்

அந்த தெருமுனை
பெட்டிக்கடையும்
மந்தமாய் விளக்கெரியும்
மளிகைக்கடையும்
இப்போதுதான்
பளிச்செனப் புலப்படுகின்றன

உன் பெயரின்
மாயமாய்
இருக்குமோ?

"சுற்றுலா"

இரண்டு மாதமாய்
திட்டமிட்டு,
‘இந்த வாரம் ஊருக்கு வரமாட்டாயா?’
செல்லச் சண்டையிட்ட அம்மாவிற்க்கு
சமாதானம் சொல்லி,
அலுவலகத்தில்
விடுமுறை போராட்டம்
ஒன்று செய்து;
சொகுசு ஊர்தியிலும்
சுகமில்லா நீண்ட பயணம்
செய்ததெல்லாம்,
என்றோ
உதறிவிட்டு வந்த
மலைகளையும் காடுகளையும்
காணத்தான் !

"விதி"

இது
நியூட்டனின் எத்தனாவது விதியென
கண்டறிய வேண்டும்;

எந்நிலையிலும்
நீ கடக்கும் வேளையில்
கண்கள் தாமாகவே
உனது பிம்பத்தை
நோக்கி நகும்.

"வியப்பு"

அணைக்க அணைக்க
காட்டுத்தீ கூட
அடங்கிவிடும்;

என்னவோ, நீ
அணைக்க அணைக்க
என்னுள்
காதல் தீ
கொழுந்து விட்டு
எரிகிறது!

“காதல் மான்கள்”

திருமணங்களுக்கு செல்லும் போதெல்லாம் இந்த “மான்” கதையை சொல்லி மணமக்களை வாழ்த்துவார் என் தந்தை.. அந்த கதையை கவிதையாக்க ஒரு சிறு முயற்சி

“காதல் மான்கள்”
**********************

பூக்கள் மகிழ்ந்தாடி
கொண்டாடும் சோலை
பகலவன் உச்சியில்
தவமிருக்கும் வேளை

வேலெறியும் விழியோடு
பெண் மானொன்று;
இணையாக துணையாக
ஆண் மானொன்று.

கண்ணொடு ஊறும்
காதலை கண்டு
நெஞ்சொடு வழியும்
நேசங் கொண்டு

எரிக்கும் சூரியனின்
வெப்பம் மறந்து
அச்சம் மடம்
வெட்கம் துறந்து

அழகு சோலையை
சுற்றி திரிந்தன
மணித்துளிகள் கடப்பதை
முற்றிலும் மறந்தன

மோகத்தில் மூழ்கி
கிடந்த இருவரையும்
தாகமும் கொஞ்சம்
வாட்டி வதைத்தது

கோடை வெயிலின்
உக்கிரத்தால் ஆங்கே
ஓடைகள் பலவும்
ஒடுங்கியே கிடந்தன.

சோலையை சுற்றி
களைத்த மான்கள்
மூலையில் அமைந்தவோர்
ஓடையை கண்டன

கருத்த விழிகளில்
பெருத்த ஏமாற்றம்
சிறிதளவு நீரே
சிந்தி கிடந்தது

“இளையவள் நீ- மிக
களைத்தவள் நீ .
அலையாடும் நீரருந்து -உன்
சோர்வுக்கிதே அருமருந்து”

ஆருயிர் காதலிக்கு
ஆண் கட்டளையிட்டது
பொறுக்காத பெண்மானோ
பதிலுக்கு முறையிட்டது

“ஆசை அத்தான்,
இருவருமே களைத்தோம்
யோசனை எதற்கு ?
இருவருமே குடிப்போம் ”

எண்ணத்தில் ஒருமித்த
மான்கள் இரண்டும்
தண்ணீரில் இதழ் பதித்து
பருக துவங்கின

நேரம் கழிந்தது
தண்ணீர் குறையவில்லை;
விபரம் புரிந்தது
யாருமே பருகவில்லை.

காதல் கனவன்
அருந்தட்டும் என்று
பேதை பெண்மான்
நடித்து காட்டியது

துணைவன் செய்ததும்
அதென்றெ அறிந்து
தலைவனை நெருங்கி
இதயம் இணைத்தது.

“கவிஞருக்கு கல்யாணம்”

இனி
நாட்குறிப்புகளை சீண்ட நேரமிருக்காது;
நடந்தவற்றை சொல்ல தோழி வந்த பின்னே !!!

செல்பேசிக்கு செலவே இருக்காது;
விழியாலேயே பேச வஞ்சி வந்தாயிற்றே !!!

விளக்கெரித்து விலகாது இரவு;
அறைக்குள்ளேயே அமர்ந்திருக்கிறதே நிலவு !!!

கவிதைக்கும் நேரம் இருக்குமோ தெரியாது;
கவிதையே துணையாய் இருக்கும் பொழுது ??!!!

“நீ”

உன்னோடு மட்டுமே
பேசி
பழகிவிட்டது
எனக்கு;

நீ இல்லாத பொழுதுகளில்
காகிதங்களோடு
மட்டுமே
பேசி
கவிதை புனைகிறேன்!!!

“மழை”

மழை
வரும்
நாட்கள் எல்லாம்
வீதிகள்
வெறிச்சோடி போகின்றன;

ஏனோ,
என் மனம் மட்டும்
நம்மை நனைத்த
அந்த மழைத்துளிகளை
தேடிக்கொண்டு
வீதிவீதியாய் அலைகிறது !!!