13 November 2007

கண்ணாமூச்சி ஏனடா : என் பார்வையில்



ராடன் நிறுவனம் & யுடிவி தயாரிப்பில், ப்ரியா.v இயக்கத்தில், சத்யராஜ், ராதிகா, ஸ்ரீப்ரியா, ப்ரித்விராஜ், சந்தியா நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்துள்ள திரைப்படம் ‘கண்ணாமூச்சி ஏனடா’

கதைச்சுருக்கம் : ப்ரித்விராஜ் சந்தியாவை மலேசியாவில் சந்திக்கிறார். காதலில் விழுகிறார். ப்ரித்வியின் ஐயர் மாமா ஜாதிவெறியில் இந்த காதலை எதிர்க்கிறார். இருவரும் இந்தியா வருகிறார்கள். இங்கே சந்தியாவின் அப்பா சத்யராஜீக்கு ப்ரித்வியை பிடிக்கவில்லை. இதனால் சண்டையிட்டு பிரியும் சத்யராஜ்-ராதிகா ஜோடியை ப்ரித்வி இணைத்து வைக்க சத்யராஜீம் ப்ரித்விராஜீம் சமாதானம் ஆக, நடுவில் சந்தியாவில் கொஞ்சம் பிகு பண்ண கடைசியில் இனிதே முடிகிறது ப்ரித்விராஜ்-சந்தியா ஜோடியின் திருமணம்

ப்ரித்விராஜ் : அவரின் முந்தைய படங்களில் பார்த்தது போலவே இதிலும் மனிதர் பேசுகிறார், பேசிகிறார்…. பேசிக்கொண்டே இருக்கிறார். பல இடங்களில் எரிச்சலும், சலிப்புமே மிஞ்சுகிறது. மத்தபடி அவருக்கு பெரிதாக படத்தில் செய்துவிட எதுவும் இருக்கவில்லை

சந்தியா : பொறியில் அடைப்பட்ட எலிக்குட்டிப் போல் கீச்சு கீச்சென்று கத்திக் கொண்டே திரிகிறார். பாவம், டப்பிங் பேசும் போது என்ன பிரச்சனையோ தெரியவில்லை? மத்தபடி சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை.

சத்யராஜ் & ராதிகா : சத்யராஜ் ஒரு பொறுப்பான கோபமான காவல்துறையில் பணிபுரியும் அப்பாவாக வலம் வந்திருக்கிறார். ராதிகா ஒரு இயல்பான குடும்பத்தலைவியாக வந்து செல்கிறார். நடுவில் கொஞ்சம் பெண்ணீயமும் பேசுகிறார்.

ஸ்ரீப்ரியா : நட்புக்காக ஸ்ரீப்ரியா. எனினும் அவர் வந்தவுடன் ஒரு தனி கலகலப்பு வந்துவிடுகிறது படத்தில். அவரும் சத்யராஜீம் அடிக்கும் லூட்டிகள் கலகலக்க வைக்கின்றன. ஸ்ரீப்ரியாவின் டைமிங் மற்றும் நகைச்சுவை உணர்வு பற்றிச்சொல்லவா வேண்டும்?

இசை : இசை ரொம்பவே சுமார் ரகம். ‘அன்று வந்தது அதே நிலா’ பாடலின் ரீமிக்ஸ் தவிர மனதில் எதுவும் நிற்கவில்லை. யுவன்ஷங்கர் ராஜாவிற்கு என்ன சிக்கலோ? மேலும் பாடல்களின் ஒளிப்பதிவு சுத்த மோசம். மணிரத்னத்தின் மாணவி பாடல்களை இப்படி எடுத்து தள்ளியிருக்கிறார் என்பதை நினைக்கும் போது வேதனையே மிஞ்சுகிறது. அனேகமாக பாடல்கள் எல்லாமே திரைக்கதையில் திணிக்கப்பட்டே இருக்கின்றன

ஒளிப்பதிவு : ரொம்பவே அழகான ஒளிப்பதிவு. கண்களை பதம் பார்க்காமல், மிக இயல்பாக இருக்கிறது. மலேசியக் காட்சிகள் பளபள என்றால் ஊட்டி காட்சிகளோ குளுகுளு ரகம்.

ப்ரியா.V : முதலில், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நல்ல படத்தைக் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் ப்ரியாவிற்கு. எங்கேயும் நெருடாமல், நல்ல ஓட்டத்தோடுக் கூடிய திரைக்கதை. ஆனால் அதே சமயம் இந்தக் கதையை இன்னும் கலகலப்பாகவும் அழகாகவும் கொடுத்திருக்கலாம். (ப்ரித்விராஜ் பேசுவது தான் கலகலப்பு என்றால், ஆள விடுங்க சாமி)

மணிரத்தினத்தின் மாணவி என்ற காரணத்தினாலும் ‘கண்ட நாள் முதல்’ படத்தின் இயக்குனர் என்பதாலும் ப்ரியாவிடம் கொஞ்சம் அதிகமாவே எதிர்ப்பார்க்கிறோமோ என்னவோ?

அப்புறம் ப்ரியா, படத்தின் பல காட்சிகள் GUESS WHO மற்றும் MEET THE PARENTS படங்களில் வந்துள்ளது போலவே இருக்கிறதாமே?

அப்புறம், கிளைமாக்ஸீக்காக காத்திராமல் எழுந்து வந்துவிடுவது உத்தமம். அப்படி ஒரு இழுவை………. எப்படியும் இது தான் நடக்கும் என்று தெரிந்த ஒரு முடிவை இத்தனை இழுத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது.

6 க‌ருத்துக்க‌ள்:

கோவி.கண்ணன் said...

//கதைச்சுருக்கம் : ப்ரித்விராஜ் சந்தியாவை மலேசியாவில் சந்திக்கிறார். காதலில் விழுகிறார். ப்ரித்வியின் ஐயர் மாமா ஜாதிவெறியில் இந்த காதலை எதிர்க்கிறார். இருவரும் இந்தியா வருகிறார்கள். இங்கே சந்தியாவின் அப்பா சத்யராஜீக்கு ப்ரித்வியை பிடிக்கவில்லை. இதனால் சண்டையிட்டு பிரியும் சத்யராஜ்-ராதிகா ஜோடியை ப்ரித்வி இணைத்து வைக்க சத்யராஜீம் ப்ரித்விராஜீம் சமாதானம் ஆக, நடுவில் சந்தியாவில் கொஞ்சம் பிக பண்ண கடைசியில் இனிதே முடிகிறது ப்ரித்விராஜ்-சந்தியா ஜோடியின் திருமணம்//

விஜய் - நடிகர் திலகம் - சரோஜாதேவி - சிம்ரன் நடித்த படத்தின் கதை போல் இருக்கிறது. அதில் சிம்ரனின் அம்மாவாக நடித்த சீஆர் சரஸ்வதி காதலுக்கு வில்லி.

ச.பிரேம்குமார் said...

நாம காலங்காலமா திரைப்படங்களில் பார்த்து வரும் கதை தான் ;-)

சீனு said...

//இசை ரொம்பவே சுமார் ரகம். ‘அன்று வந்தது அதே நிலா’ பாடலின் ரீமிக்ஸ் தவிர மனதில் எதுவும் நிற்கவில்லை.//

ஹூம்...மேகம் மேகம் பாடலை கேட்கவில்லையா? அருமையான பாடல். மேலும் கண்ணாமூச்சி ஆட்டம் மற்றும் புத்தம் புது காத்துடா பாடல்களும் நன்றாகவே இருக்கின்றன.

கோபிநாத் said...

எப்படி இருந்தாலும் பார்த்துடுவேன் (இங்க வேற என்ன இருக்கு பொழுது போறாதுக்கு) ;))

ச.பிரேம்குமார் said...

வாங்க சீனு,

நீங்க சொன்ன பாடல்கள் அவ்வளவா மனதை கவரவில்லை. மேகம் மேகம் பாடல் பரவாயில்லை....

ஒருவேளை காட்சிகளா இந்தப் பாடல்கள் அழகா படமாக்க படாதது ஒரு காரணமா இருக்கலாம் :(

ச.பிரேம்குமார் said...

வாங்க கோபி,
கண்டிப்பா பாருங்க... மற்றவை இதைக் காட்டிலும் பெரும் மொக்கையாமே ;-)

அந்த வகையில் இந்தப்படம் இவ்வளவோ தேவலை