சென்னையில் வாடகைக்கு வீடு தேடி நொந்து நூலாகும் அனேகம் பேரில் நானும் ஒருவன். இந்த வருடத்தில் இது இரண்டாவது முறை. தினமும் நூற்றுக்கணக்கானோர் குடிபெயரும் இந்த சென்னையில் வாடகைக்கு வீடு தேடுவது மிக மிக கடினமான ஒரு வேலையாக தான் இருக்கிறது.
இப்போது இருக்கும் வீட்டை விற்றுவிட்டு இன்னும் பெரிதானதொரு வீட்டை வாங்க போகிறாராம் வீட்டின் உரிமையாளர். ம்ம்ம், ஆறு மாசத்தில உங்களால வேறு வீடு வாங்க முடிகிறது நல்ல விசயம் தான். ஆனால் ஆப்பு என்னமோ எங்களுக்கு தான்.
முன்பு போல் இப்போது எங்கும் 'வீடு வாடகைக்கு விடப்படும்' பலகையை பார்க்க முடிவதில்லை. எல்லா இடங்களில் இடைத்தரகர்களை தான் நம்ப வேண்டியிருக்கிறது. ஏதாவது புண்ணியவான்கள் வலைதளங்களில் விளம்பரம் செய்திருந்தாலும் கொஞ்ச நேரத்திலேயே தொலைபேசினாலும் 'முடிந்துவிட்டது' என்று தான் பதில் வருகிறது
வலைப்பூவில் எழுதி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. உருப்படியா சீக்கிரம் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனா இப்போது இந்த புலம்பலை இங்கே இட வேண்டிய நிலை. வேற எங்கே போய் புலம்புறது????
மடிப்பாக்கத்தோடு இப்போது தான் கொஞ்சம் நெருக்கம் ஏற்பட்டு இருக்கிறது. மடிப்பாக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக நேசிக்க ஆரம்பித்திருக்கும் இந்த தருணத்தில் இப்படி ஒரு செய்தி. மடிப்பாக்கத்துடனான உறவு தக்க வைக்கப்படுமா இல்லை முறியுமா என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்...
31 July 2008
மடிப்பாக்கம் விட்டு வைக்குமா வைக்காதா?
பதித்தது : ச.பிரேம்குமார் 18 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள்
8 July 2008
மாமன் மகள் பதித்துப்போன நினைவுகள்
வீட்டில் ஒரு நற்காரியம் என்பதால் நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் கூடியிருந்தனர். நான், எனது பெரியம்மா மக்கள் என்று பிள்ளைகள் கூட்டமாய் சுற்றிக்கொண்டிருந்த காலம் போய் இப்போது அக்கா குழந்தைகள், தங்கையின் மகள், மாமன் பிள்ளைகள் என்றொரு அழகு மழலைப் பட்டாளம் வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தது.
***
மாமா பெண் இப்போது தான் மழலையர் வகுப்பு சேர்ந்திருக்கிறாள். பெண் பிள்ளைகளுக்கு எப்படித்தான் அந்த அழகுணர்ச்சி வருமோ தெரியவில்லை, இப்போதிலிருந்தே ஆடைகள், நகைகள் என்றால் கொள்ளை பிரியம் அவளுக்கு. அது எந்த அளவுக்கு போயிருக்குன்னு பாருங்க
அத்தை : அபி, இன்றைக்கு பள்ளியில என்ன சொல்லிக்கொடுத்தாங்க? டீச்சர் நல்லா தராங்களா?
அபி : போம்மா, எங்க டீச்சருக்கு ஒன்னுமே தெரியல. இன்றைக்கு ஆத்திசூடி சொல்லிக்கொடுத்தாங்க... அம்மா அது 'நெத்திசூடி' தானே. டீச்சர் ஏன் 'ஆத்திசூடி'ன்னு சொல்றாங்க?
ஆத்தா, நல்ல வேளை அவ்வையாரால இதெல்லாம் கேக்க முடியாது
***
அத்தை : சரி அந்த ஆத்திசூடிய கொஞ்சம் சொல்லு
அபி : அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்......... தூக்கமது கைவிடேல்
அத்தை : வெளங்கிரும் !!
***
அபி திடீரென்று அழ ஆரம்பித்துவிட்டாள். பதறிப்போய் என்னவென்று கேட்டால், சட்டையில் தண்ணீர் சிந்தி ஈரமாகிவிட்டதாம். சரிம்மா இதை கழட்டிவிட்டு வேறு உடை போட்டக்கலாம் என்ற போது கண்ணீர் மறைந்து பெருஞ்சிரிப்பொன்று ஒட்டிக்கொண்டது
மாமாவோ எந்த சலனமுமில்லாமல் வேறு உடையை கொண்டு வந்து கொடுத்துப் போட்டுக்கொள்ள சொன்னார்கள். நான் ஏதோ ஒன்று விளங்காதவனாய் மாமாவை பார்த்தபோது அவர்கள் சொன்னது,
"மொத்தம் நாலு உடை கொண்டு வந்திருந்தோம். இன்னும் ஒன்னு போடாம் இருந்தது. இப்போது கிளம்பு நேரம் வந்திருச்சா. அதான் இந்த நாடகம்"
ஆகா, ஒரு மார்க்கமாதான்யா இருக்காங்க
***
என் தங்கையின் மகன் பிரணவுக்கு ஒரு வயதாகி முன்று மாதம் தான் ஆகிறது. ஆனால் அவன் செயல்கள் எல்லாமே வியப்பாய் இருக்கிறது. என் தங்கை அவனை சரியாக வளர்க்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும்
காகம், நாய், சிங்கம், குதிரை எல்லாம் எவ்வாறு ஒலி எழுப்பும் என சொல்ல தெரிகிறது. வீட்டிலுள்ள பொருட்களின் பெயர் சொன்னால் அவற்றை சுட்டிக்காட்ட தெரிகிறது. புத்தகங்களிலும் அவற்றை சரியாக அடையாளம் காட்டுகிறான்.உறவுகளையெல்லாம் நன்றாக சொல்ல தெரிகிறது. அவனைவிட கொஞ்சம் வளர்ந்த வேறு சில குழந்தைகள் ஆர்வமாக வந்து 'நான் யார்ன்னு சொல்லு' என்ற போதும் குழம்பாமல் 'அண்ணா, அக்கா' என்று சொல்லி சமாளித்தான். தாங்களே குழந்தைகள் தான் என்பதை மறந்து அவன் விளையாட்டையும் அவன் மழலையையும் கொண்டாடிக்கொண்டிருந்தன மழலைப் பட்டாளம்.
***
அவர்கள் வீட்டினருகே சாலை அமைத்த போது கொண்டுவரப்பட்ட 'ரோட் ரோலர்' அவனுக்கு பெரிய வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அப்போது பெரிதாய் இருக்கிறது என்று குறிப்பதற்கு இரண்டு பிஞ்சு கைகளையும் தலைக்குப்பின் உயர்த்தி காட்ட கற்றுக்கொண்டிருக்கிறான்
புதுவையின் கடற்கரை என் தங்கைக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சிறு பிள்ளைகளாய் நாங்கள் விளையாடித் திரிந்த அதே கடற்கரை சாலையில் ப்ரணவையும் கூட்டிக்கொண்டு நடந்தார்கள். என் தங்கை இன்னும் ரசிக்கும் அந்த கடற்கரையை அவனும் கண்டு ஆர்ப்பரித்திருக்கிறான். வீட்டுக்கு வந்தவுடன் என்னடா செல்லம் பார்த்தே என்று கேட்டால் சிரிக்க மட்டுமே தெரிந்தது. இருப்பினும் கடலில் எவ்வளவு தண்ணீர் இருந்தது என்று கேட்டால் இரு கைகளையும் பின்னோக்கி உயர்த்தி காட்டியபோது அவன் கண்களிலும் அத்தனை வியப்பும் ஆச்சரியமும் அப்போதும் இருந்தது
வெளியே போகும் போது எனக்கு உன்னோட சுரிதார் ஒன்றை கொடு என்று என் இளைய தங்கையிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் தங்கை. அய்யோ அக்கா, உனக்கு பெரிய உடை தானே பொருந்தும் என்று கேலி செய்துக் கொண்டிருந்தார்கள் தங்கைகள். அப்போது ப்ரணவை அழைத்து, 'அம்மாக்கு எவ்வளவு பெரிய உடை வேண்டும் தம்பி' என்று கேட்ட போது எப்போதும் இல்லாத வண்ணம், கைகளை மிக அலகமாக தலைக்கு மேல் விரித்து காட்டினான். சிரிப்பலைகள் நிற்க வெகு நேரம் ஆனது
பதித்தது : ச.பிரேம்குமார் 17 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள்