12 June 2009

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : காலயந்திரம்



காலச்சக்கரங்களை கட்டிக்கொண்டு
ஒருவழிப்பாதையில் விரைகிறது வாழ்க்கை

திசைமரமோ வழிகாட்டியோ
இல்லாத கணங்கள் பயம்நிறைந்ததாய் இருக்கின்றன
வேறு சாத்தியக்கூறுகளற்று பாதையின் போக்கிலேயே
போவதை துணிவென்று அறிவிக்கிறேன்

வனப்புமிகுந்த சோலைகளை தாண்டித்தான்
செல்கிறேன்ற போதிலும்
எதற்காகவும் நிற்பதாயில்லை
மீண்டும் அவற்றை கடக்க நேரிடுமென்றும்
நிதானிக்க நேரமில்லையென்றும்
சொல்லிக்கொள்ளலாம்

நினைவிலிருத்திக் கொள்ளமுடிந்தவைகளை
பயணத்தின் முடிவில் கட்டாயம்
குறித்து வைப்பதாய் முடிவு

இக்கணம் வரை
சேரப்போகும் முகவரி இதென்பதை மட்டுந்தான்
சர்வநிச்சயமாய் சொல்ல முடியவில்லை

11 June 2009

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : மனிதத்தைத் தேடி

ஒவ்வொரு நாளும் ஏதோவொரு இடத்தில் யாரேனும் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகிக்கொண்டே தானிருக்கிறார்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது வெறும் சொற்களில் மட்டுமே இருக்கிறது. எத்தனை தூரம் நாகரீகம் வளர்ந்திருந்தாலும் இன்னும் சகமனிதனை ஒரு உயிராய் கூட மதிக்க தெரியாதவர்கள் நிறைந்த உலகத்தில்,வாழ்வது கூட ஒரு பெரும் சாதனையாகத்தான் ஆகிவிடக்கூடும். சொல்வதற்கு புதிதாக ஏதுமில்லை, அல்லது அதற்கு மனம் ஒப்பவில்லை. அடுத்த தலைமுறைக்காவது மனித்தை கற்றுத்தர வேண்டிய கடமை நமக்கு பெரிதாக இருக்கிறது என்று ஒன்றை மட்டும் என்னால் சர்வ நிச்சயமாக சொல்ல முடியும். இப்போதைக்கு இனவெறி தாக்குதல்களுக்கு ஆளாகும் ஒவ்வொருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.



மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே!
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே

காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

துளியெல்லாம் கைகோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகளலெல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்

விடியாத இரவென்றும் வானில் இல்லை
ஒலியோடு ஒலி சேரட்டும்

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : சூப்பர் சிங்கர்களும் சிற்சில சிக்கல்களும்

விஜய் தொலைகாட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒரு வழியாக ஒரு வருடத்திற்கு பிறகு போன வாரம் முடிந்தது. போன முறை இறுதிகட்டத்தில் விமர்சனங்கள் வந்தன. ஆனால் இம்முறை ஆரம்பம் முதலே நிறைய விமர்சனங்கள். ஒரு சாராருக்கு மட்டுமே தான் வாய்ப்புகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குழு மனப்பாண்மை மனிதனின் ஆதி குணம். குகைகளில் வாழ்ந்த காலத்திலேயே தனக்கென்று ஒரு கூட்டத்தை அமைத்துக்கொண்டு அதனோடே வாழ்ந்து பழகியவர்கள். இன்னமும் அதன் பாதிப்பு பெரியளவு இருக்கவே செய்கிறது. இனப்பற்று என்பது நல்லது தான். ஆனால் அடுத்தவருக்கு தீங்கிழைக்காத வரை. அடுத்தவருக்கு துரோகம் இழைக்கப்படுகையில் ஒருவருக்கு பற்றுதலாக தோன்றுவது அடுத்தவருக்கு வெறியாகவும் அயோக்கியத்தனமாகவும் தோன்றலாம்

வேற்றுமொழி சுற்றுகள் இடம்பெற்ற போது அந்த மொழிகளுக்கான உச்சரிப்பில் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் தமிழ் உச்சரிப்பை பற்றி பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. உள்ளூரில் தமிழனுக்கு எப்போதும் மரியாதை குறைவாகவே கிடைக்கிறது.

அடுத்து இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்காக நடத்தப்படவுள்ளது. ஏற்கனவே போட்டி நிறைந்த உலகம் என்று சொல்லி சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு அழுத்தத்தை உண்டாக்க துவங்கிவிட்டார்கள். தோல்வியுறும் போதெல்லாம் கதறி அழும் குழந்தைகளை காண்கையில் மனம் கலங்குகிறது. அவர்களை தோல்வியுறுவதை காட்டிலும், இந்த சின்ன தோல்விக்கே மனம் துவண்டால் பின்னாளில் இவர்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற நினைக்கையில் பதற்றமாய் இருக்கிறது

நாள்தோறும் இப்படியான நிகழ்ச்சிகள் தொலைகாட்சிகளிலும், பள்ளி கல்லூரி வளாங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. நாளை நம் வீட்டு பிள்ளைகளும் இம்மாதிரி போட்டிகளில் கலந்து கொள்ளலாம். ஏதோ ஒரு முட்டாள்தனமான காரணத்திற்காகவோ அல்லது நடுவரின் இனவெறியினாலோ அவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்கள் நிலை என்னவாக இருக்கும்? உண்மையாகவே அவர்கள் தோல்வியுற்றாலும் அதனை எப்படி எடுத்துக்கொள்ள போகிறார்கள்? அந்த நிலையை எதிர்கொள்ளும் விதத்தை அவர்களுக்கு எடுத்துரைக்க நமக்கு பக்குவம் இருக்கிறதா?

10 June 2009

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : திரையரங்குகளை தொலைத்த தெருக்கள்

நட்சத்திர வாரத்தில் புதுவையை பற்றி எழுதாவிட்டால் எப்படி? ஆனால் என்னவென்று எழுதுவது. எதை எழுதினாலும் அதோடு கலந்திருக்கும் என் பால்யமும் என் பதின்மங்களும் என்னை அதனோடு இழுத்துக்கொண்டு பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்துவிடும். நான் நினைவுகளில் தொலைந்து போகக்கூடும்.


புதுவை என்றாலே பலருக்கு பல விசயங்கள் நினைவுக்கு வரும். அதன் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை, பியர், அன்னை.. இன்னும் பல


அவற்றை தவிர இன்னொன்றும் மிக பிரபலமாக ஒரு காலத்தில் இருந்தது; திரையரங்குகள். புதுவையின் நகரப்பகுதி மிகவும் சிறியது. (இப்போதைய புதுவையின் எல்லை மிகவும் விரியவடைந்து விட்டது. முழுக்கவே நகரமயமாகிவிட்டது). நகர பகுதியை சுற்றியிருக்கும் நான்கு பிரதான சாலைகளையும் (Boulevard) நீங்கள் நடந்தே கூட சுற்றிவரலாம். ‘எல்லா சாலைகளும் ரோமில் தான் முடியும்’ என்று ஒரு ஆங்கில பழமொழியுண்டு. புதுவையின் நகரப்பகுதியின் எல்லா சாலைகளுமே கடற்கரையில் தான் முடியும்.


அந்த நான்கு பிரதான சாலைகளிலும் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் ஏகப்பட்ட திரையரங்குகள் உண்டு (அப்போது!). அனேகமாய் அனைத்திலும் கூட்டம் இருக்கவே செய்யும். எப்படி புதுவையில் குடிப்பவர்களில் முக்கால்வாசி பேர் வேற்று நகரவாசிகளோ, அப்படியே திரையரங்களிலும் நிறைய வெளியூர்காரர்களை காணலாம். சொந்த பந்தம் எல்லாம் புதுவை வருகையில் கட்டாயம் ஒரு திரைப்படத்தையாவது பார்த்து விட்டுத்தான் செல்வர். ஒரு திரையரங்கில் நெரிசலெனில் நடந்தே அடுத்த திரையரங்கித்திற்கு சென்றுவிடலாம். ஆனால் காலம் தீட்டும் ஓவியத்தில் வண்ணங்களும் உருவங்களும் மாறிக்கொண்டே தானிருக்கும். இப்போது புதுவையில் உருப்படியான திரையரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பல திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும், உல்லாச விடுதிகளாகவும் மாறிவிட்டன.


குறிப்பாக ’ஆனந்தா’ திரையரங்கு இடிக்கப்பட்ட போது என்னவோ போல் இருந்தது. இளநிலை படிக்கையில் அங்கு எத்தனையோ திரைப்படங்களை பார்த்திருக்கிறோம். ஒவ்வொன்றும் ஒரு அனுபவம். திரைப்படங்கள் மேல் பெரிதாக மோகம் ஒன்றுமில்லை. ஆனால் எங்கள் உச்சக்கட்ட பொழுதுபோக்கே அது தான். அப்போதைக்கு எங்களுக்கு அவ்வளவு தான் Exposure இருந்தது :-)


சில நாட்களுக்கு முன் நண்பன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்தேன். இப்போது ஜப்பானில் இருக்கிறான். பொழுது போக என்னடா செய்யுறன்னு கேட்டதற்கு, “இணையத்தில் தான் தேடித்தேடி படமா பாத்துக்கிட்டு இருக்கேன்”ன்னு சொன்னான். ஏண்டா? அங்கயெல்லாம் திரையரங்கு இல்லையான்னு கேட்டதுக்கு “நீ வேற, பத்து ரூபாய்க்கு படம் காட்ட மாட்டாங்களாம்டா, நாமெல்லாம் பத்து ரூபாய்க்கு படமும் பாத்துட்டு பார்க்கார்னும் சாப்டவுங்களாச்சே! இதெல்லாம் வேலைக்கு ஆகாதுடா” அப்படீங்கிறான். அடப்பாவீகளா, உங்க நக்கலு மாறவே மாறாதாடா?

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : கேள்விகள் ஆயிரம்

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
நடுவண் அரசில் வேலை செய்ததால் ஒரு இந்தியப் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பி அப்பா வைத்தது. என் பெற்றோர் ஆசையாக இட்ட பெயரை பிடிக்கவில்லை என்று சொல்வது அயோக்கியத்தனம் என்றே நினைக்கிறேன்

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
என் அம்மாச்சி இறந்த போது. விடுமுறைக்கு செல்லும் போதெல்லாம் எங்களுக்கு பல கதைகள் சொல்லி, வகைவகையாய் சமைத்து போட்டுவர் வாய்க்கு அரிசி போட்ட போது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
என் கையெழுத்து அழகாக இருப்பதாக பலர் கூறியிருக்கின்றனர். ஆனால் கல்லூரிக்கு பிறகு எழுதுவது வெகுவாக குறைந்துவிட்டது. இப்போ கொஞ்சம் கிறுக்க ஆரம்பித்துவிட்டேன்

4.பிடித்த மதிய உணவு என்ன?
வீட்டில் சமைத்தது எதுவும்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
பலரை எனக்கு பாத்தவுடனேயே ரொம்ப பிடிச்சிரும். ஆனா நட்பு பலப்பட சில காலம் பிடிக்கலாம்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
நீச்சல் தெரியாதெனிலும் கடலில் நெஞ்சளவு தண்ணீரில் இறங்கி குளிப்பதுண்டு.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்கள் எப்படி பேசுகிறார்கள்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விசயத்தை மத்தவங்க தான் சொல்லனும்
பிடிக்காதது கோபமும் சோம்பேறித்தனமும்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது அவள் அன்பு. பிடிக்காதது அவள் கோபம்

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
பொழில்குட்டி

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
சாமி படத்துல “பாஸ்போர்ட சைஸ் படம் தானேன்னு நான் அன்னிக்கு பேண்ட் கூடத்தான் போடலை” அப்படீங்கிறது தான் நினைவுக்கு வருது :)

12.என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பக்கத்துல ஒரு பயபுள்ள என்னமா கடலை போடுறான். அப்படி என்னதான் பேசுவானுங்களோ? ;)

14.பிடித்த மணம்?
தன் வீட்டை மட்டும் சுத்தமாய் வைத்துக்கொண்டு தெருவில் குப்பையை கொட்டி வைப்பதனால் வரும் வாடையை சுத்தமா பிடிக்காதுன்னு மட்டும் சொல்ல முடியும். பிடித்ததுன்னு குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
கிட்டதட்ட பறவை காய்ச்சல் மாதிரி இந்த பதிவும் படுபயங்கரமா பரவியிருக்கு. யார் எழுதினாங்கன்னு, யாரு எழுதலைன்னு தெரியல

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ? ராமின் “நாங்க போலீஸ்காரங்க” பதிவுகள். தமிழில் பதிவெழுதும் (எனக்கு தெரிந்த) ஒரேயொரு காவல்துறை அதிகாரி
வானவில் வீதியில் ரொம்ப பிடித்தது அவன் கல்லூரி பதிவுகள். தற்சமயம் பிடித்தது ‘தனிமையின் விலை’ தொடர்கதை :)

17. பிடித்த விளையாட்டு?
வீடியோ கேம்ஸ்

18.கண்ணாடி அணிபவரா?
ஆம்! இதனால் நீங்க நாட்டுக்கு சொல்ல வருவது??? ;)

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
சண்டையும் ஆபாசமும் இல்லாத படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன். அதொரு அற்புத அனுபவமாய் வாய்த்துவிட்டது

21.பிடித்த பருவ காலம் எது?
கோடை காலம்

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போதைக்கு ஒன்றுமில்லை

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது சிரிப்பு சத்தம்.கூச்சலும் குழப்பமும் அமைதியற்ற சூழலும் மிகுந்த வேதனை தரும்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருந்திருக்கலாம். ஆனால் எதையும் உணர்ந்து முழுமூச்சாக ஈடுபட்டதில்லை

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
வன்முறை

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
புதுவை கடற்கரை

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
சமூகத்துக்கு உதவியாக

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அவளை பற்றி நினைப்பது

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழுங்கள், வாழ விடுங்கள்

எதுக்குன்னே புரியாம இரண்டு கேள்விகள் இருந்துச்சு. அவற்றை சாய்ஸில் விட்டுட்டேன் :-) நட்சத்திர வாரத்திலா இந்த பதிவை எழுதுவது என்று கேட்டால், வழிவதை தவிர வேறு வழியில்லை எனக்கு!! தொடர்ந்து கேள்விகள் கேட்டல் என்னவோ எனக்கு பிடிப்பதில்லை. நீங்க எல்லாம் அப்படி தான் தேர்வுகள் எழுதி படிப்ப முடிச்சீங்களோன்னு கேள்வி வருவதுண்டு. அதனால் இந்த முப்பது கேள்விகள் கூட தாவு தீர்ப்பதாகவே இருந்தன. அதனால் தான் இப்படியொரு தலைப்பு :-))

9 June 2009

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : பனியில் கரைதல்



குளிர் அலுத்துவிட்ட
பனிப்பிரதேசத்தின் சன்னலொன்றை
பிடிவாதமாய் தட்டுகிறது சூரியன்.
கண்ணாடிகளை ஊடுருவி
அறையை நிரப்பப் பார்க்கிறது வெம்மை.
அதிகரித்துக் கொண்டிருக்கும் கதகதப்பு
பிடித்தமானதாய் இருக்க
இனி மொத்தமாய் பனியை வெறுத்துவிட
துணிகிறேன்

அடைக்க மறந்த ஏதோவொரு இடுக்கின்வழி
மெல்லக் கசியும் பனிக்காற்று
கதகதப்பின் உச்சத்தில்
நான் கரைந்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகளை
வேரறுத்துக் கொண்டிருக்கிறது

- ச.பிரேம்குமார்

இதை எழுதி வெகு காலமாயிற்று. சில நெருங்கிய நண்பர்களுக்கு இந்த கவிதையின் வரிகள் ஏற்கனவே பழக்கமாகியிருக்கலாம். சஞ்சிகைகளுக்கு அனுப்பி பலனில்லாது போக மின்னஞ்சல் பெட்டியிலேயே கிடந்தது. புதிதாக எழுத இயலாமல் போகவே இதையிங்கு இட்டு நிரப்பிவிட்டேன்

6 June 2009

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : அறிமுகம்

சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்து, பின் பிரான்சின் பலகணி என்று சொல்லப்படும் புதுவையில் வளர்ந்தேன். கணினித்துறையில் பணி என்பதால் பெங்களூரில் சில காலம் கழித்துவிட்டு தற்போது சென்னையில் குடியேறியாகிவிட்டது.

கூட்டுப்புழுவாய் என் சிறு உலகத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தேன். சமூக கோபங்களும், சமூகம் குறித்தான எண்ணங்களும் இருந்த போதிலும் பெரிதாக அதை வெளிப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் இருந்ததில்லை. அல்லது பெரிதாக நான் முயன்றதில்லை. வலையுலக அறிமுகம் கிடைத்த பின் தான் என் உலகம் சற்று விரிய தொடங்கி இருக்கிறது. ஒத்த கருத்துடைய நண்பர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாள் தோறும் புதிதாக எதோ ஒன்றை கற்று கொண்டிருக்கிறேன். மனித மனங்களின் அழகையும், வக்கிரங்களையும் ஒரு சேர நாள் தோறும் எங்கேனும் காண கிடைத்து கொண்டே தான் இருக்கிறது.

இலக்கிய உலகம் கடலேனில் அதன் ஒரு கரைக்கு வெளியே நின்று கொண்டு அதன் அழகை கண்டு ரசிக்க துடித்து கொண்டிருக்கிறேன். அவ்வப்போது ஆசையில் அதில் கால் நனைக்க நினைப்பதுண்டு. ஆனாலும் இன்னும் இறங்கி குளிக்கவும், அதன் ஆழங்களை அலசவும் முயன்றதில்லை. இன்னும் நிறைய காலம் தேவைப்படலாம்.
இந்த நட்சத்திர வாரத்தில் என் வலைப்பக்கங்களில் எழுதிப்பகிர என்ன காத்திருக்கிறது என்று தெரியவில்லை. மொழியோடு பயணிக்கும் என் பாதையில் இதொரு வசந்த காலமாய் இருக்கவும் செய்யலாம்.

முதன் முதலாய் வெங்கடேஷ் அண்ணாவை புதுச்சேரி வலைப்பதிவர் சந்திப்பில் தான் சந்தித்தேன். புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிக்கூடத்தில் வேலைகளுக்கு நடுவே நழுவி உணவகத்தில் அவசரமாய் உணவருந்தி வந்ததும், கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டு கல்லூரி மாணவர்களைப் போல் அரட்டை அடித்துக்கொண்டிருந்ததையும் மறக்க முடியாது தானே அண்ணா :-)

அப்போது தூரிகா வலைப்பூவில் எழுதிக்கொண்டிருந்தார். திரட்டி.காம் வேலைகள் ஆரம்பித்திருந்தன. அப்போதே வாரம் ஒரு வலைப்பூ என்று ஒரு பகுதி வைக்கப் போகிறோம். உன் வலைப்பூ தான் முதலாவதாக இருக்கும் என்று சொன்னார். இடையில் சிறிது காலம் வேலைப்பளுவில் சிக்கி அவருடன் பேச இயலாது போனது. ஆனாலும் திரட்டி.காம் நட்சத்திரப்பதிவுகள் ஆரம்பிக்கும் போது முதல் மடலை எனக்கு அனுப்பி என் விவரங்கள் கேட்டார். அண்ணா, எத்தனை நன்றி சொன்னாலும் போதாது உங்களுக்கு. ஆனால் நீங்கள் கேட்ட விவரங்களை சரியான நேரத்திற்கு அனுப்ப இயலாது போனது. அதற்கான மன்னிப்பையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்(சொக்கா, திரட்டி.காம்’மின் முதல் நட்சத்திர பதிவர் அப்படீன்னு சொல்லிக்க முடியாதே :-)))

2 June 2009

செல்வேந்திரனும் நானும் நண்பர்கள் இல்லை

அருகாமையில் இருக்கும் நபர்களிடம் நட்பு பாராட்டாமல் அதென்ன ஆர்குட், வலைதளங்கள் என்று நட்பை தேடுவது என்று கேட்கிறார் செல்வேந்திரன். உண்மை தான். பல சமயங்களில் நமக்கென்று ஒரு உலகத்தை அமைத்துக்கொண்டு சுற்றியிருப்பவர்களை மறந்துவிடுகிறோம். இருக்கும் இடத்தை விட்டு நம்மை தனிமைப்படுத்திக் கொள்கிறோம். அது எத்தனை கொடுமையானது என்று யோசித்து பார்க்கையில் விளங்கியது. சுற்றத்தை மறந்து, அதோடு ஒன்றி வாழாமல் இருக்கும் வாழ்க்கையில் என்ன இருந்துவிடப் போகிறது

ஆனால் இந்த இணைய நட்புகள் எல்லாமே அபத்தம், வெட்டி வேலை என்பது போன்ற ஒரு தோற்றம் செல்வாவின் கருத்துகளை மேலோட்டமாக பார்க்கையில் தோன்றலாம். இக்கருத்துக்கு எப்போதுமே எனக்கு முரண்படுவதுண்டு. உயிருக்குயிரான நண்பனாகவே இருந்தாலும் ரசனைகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ரசனைகளில் நீங்களும் உங்கள் நண்பரும் இரு வேறு துருவங்களாய் இருக்கலாம். இலக்கியத்தேடல் அதிகமாய் உங்களுக்கு தினத்தந்தியின் சிந்துபாத் தான் அதிகபட்ச இலக்கியம் என்று நம்பிக்கொண்டிருப்பவர் நண்பனாக அமைந்தால்?

உங்களுக்கு முடியலத்துவத்தை எழுத ஆனந்த விகடனில் இடம் ஒதுக்குகிறார்கள். கவிதை எழுதினால் படிக்க தான் மட்டுமே இருக்கும் சூழலுடையவர்கள் என்ன செய்வார்கள்? தமிழ் என்று ஒரு மொழி இருப்பது கூட அறியாவதர்கள் மத்தியில் உங்கள் மொழியை மறக்காமல் இருக்க என்ன வழியிருக்கிறது? ஒத்தக் கருத்துடைய நண்பர்களை இனங்காண, ரசனைகளை பகிர்ந்துக்கொள்ள இணையம் ஒரு நல்ல இணைப்பாக இருந்தே வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை



செல்வேந்திரன் கலந்து கொண்ட நீயா நானா நிகழ்ச்சியின் காணொளி

இந்த இணையமும் வலைப்பூக்களும் அதில் வரும் நட்புகளும் இல்லாமல் போயிருந்தால் பதிவின் தலைப்பை தான் நான் சொல்ல வேண்டியிருந்திருக்கும். ஆனால் இப்போது என் நண்பர் தொலைகாட்சியில் தோன்றுகிறார் என்று பெருமையாய் சொல்லிக்கொள்ள முடிகிறது

குட்டிச்சாத்தான்(குளத்தான்)க்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகள்