2007ம் ஆண்டு தான் முதன் முதலில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். முன்பே புதுவையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருக்கிறேன் என்ற போதும், வாசிப்பில் கொஞ்சம் ஈடுபாடு வந்தவுடன் சென்றதால் 2007 புத்தகக் கண்காட்சியை என்னால் மறக்கவே முடியாது.
ப்ரியன் தான் என்னை முதன் முதலில் அங்கே கூட்டிச்சென்றார். நான் விரும்பிய தலைப்புகளில் நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகப்படித்தினார். நிறைய நூல்களை வாங்க ஆலோசனைகள் கூறினார். அடுத்தடுத்து போன ஒவ்வொரு முறையும் அவருடன் தான் சென்றிருக்கிறேன், அல்லது அவரை அங்கு சந்தித்திருக்கிறேன்.
இம்முறையும் புத்தகக் கண்காட்சி தொடங்கியதும் நண்பர்கள் எல்லோருக்கும் கண்காட்சியில் சந்திக்கலாம் என்று குறுந்தகவல் அனுப்பியாயிற்று. சிலர் வர முடியாமல் போக, நான், 'வானவில் வீதி' கார்த்திக், த.அகிலன், எழில்பாரதி மற்றும் ப்ரியன் 11ம் தேதி கண்காட்சியில் சந்திப்பதாய் முடிவு செய்தோம்.
கார்த்திக்கிற்கு இந்த அனுபவம் புதிதாக இருந்தது. கிட்டதட்ட நான் 2007ல் இருந்த மனநிலையில் தான் இருந்தான். கண்காட்சி குறித்த அவன்
பதிவிலேயே அது தெரிகிறது. கூட்டி சென்றது நான் எனினும், புத்தகங்கள் குறித்தும் வாசிப்பு குறித்தும் அகிலன் தான் அவனுக்கு நிறைய சொல்லிக்கொண்டிருந்தார்.
மதிய உணவு படு மோசமாக இருந்தது. ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பகம் மட்டுமே உணவை வழங்கிக்கொண்டிருந்ததால் அவர்கள் நோக்கத்திற்கு விலையை நிர்ணயித்திருந்தார்கள். அடுத்த முறை நிர்வாகிகள் இதை கொஞ்சம் கண்டு கொண்டால் நன்று
நிறைய கூட்டம் இருந்ததும், நிறைய பேர் இன்னும் வாசிக்கிறார்கள் என்று நினைக்கிற போதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பலரும் ஆன்மீகப் புத்தகங்கள், சமையல் கலை, பணம் சம்பாதிப்பது எப்படி போன்ற நூல்களைத்தான் வாங்கிகிறார்கள்
இம்முறை குழந்தைகளுக்கான நூல்கள் விற்கும் அரங்கள் நிறையவே தென்பட்டது நிறைவாய் இருந்தது. ஆனால் பலவும் ஆங்கிலத்திலேயே இருந்தது. தமிழில் குழந்தைகளுக்கான நூல்கள் அதிகம் இல்லையா?
நேற்று மீண்டுமொரு முறை கண்காட்சிக்கு சென்று வந்தோம். புத்தகக் கண்காட்சிக்கு செல்வது எத்தனை முறை நடந்தாலும் அலுப்புத்தராத ஒரு அனுபவமாகவே இருக்கிறது. இம்முறை நிறைய நூல்களை வாங்கவில்லை. வாங்கியவையின் பட்டியல்
1. நான் வித்யா - லிவிங்ஸ்மைல் வித்யா
கொஞ்சம் தாமதமாகத்தான் வாங்கியிருக்கிறேன். அவர் வாழ்வில் கண்ட வலிகளையெல்லாம் படிக்கையில் நம்மையும் உணரச் செய்திருக்கிறார்
2. ஆயிஷா - இரா. நடராசன்
நமது கல்வி முறையை கோளாறுகளை அழகாய் எடுத்துரைக்கும் ஒரு குறுநாவல். விலை ரூ. ஐந்து தான். கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று
3. நொண்டிக்காவடி - யுகபாரதி
நேர்நிரையின் கவிதை நூல்களின் அழகே தனி தான். கைக்கு அடக்கமான அதன் வடிவமும், அழகான அட்டையும், உறுத்தாத எழுத்துருக்களும், அந்த நூல்களை வைத்திருப்பதும் படிப்பதுமே ஒரு அலாதியான சுகம் தான்.
'நொண்டிக்காவடி' யுகபாரதியின் சமூகக் கவிதைகளின் தொகுப்பு.
4. தனிமையின் நிழல் குடை - த. அகிலன்
இணையம் மூலம் அறிமுகமான நண்பர் அகிலனின் கவிதை நூலை இப்போது தான் வாங்க நேர்ந்தது. எழுதிய கவிஞரோடு சேர்ந்து போய் அந்த நூலை வாங்கியதிலும் ஒரு தனி மகிழ்ச்சி இருந்தது.