4 November 2009

தீபாவளி.. ஹோய்.. தீபாவளி

தலைப்ப ஜிடாக்’கில் ஸ்டேடஸ் மெசேஜா வச்சிட்டு இந்த வானவில் வீதி காத்திக்’கிட்ட நான் பட்ட பாடு இருக்கே! அதை தெரிஞ்சுக்க நீங்க முழு பதிவையும் படிச்சுட்டு பதிவின் கீழ் பார்க்கலாம். அல்லது நேரே பி.கு வை மட்டுமே பார்க்கலாம்

உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

என்னத்த சொல்ல? எழுதும் கணத்தில் உலக மக்கட்தொகை 679 கோடி. அதில் நானும் ஒருவன். கடைசி வரைக்கும் மனிதனாகவே இருக்க விரும்பும் ஒருவன் என்று வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம்.

தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?
எப்பவும் மறக்க முடியாத தீபாவளி நான் வேலைக்கு சென்ற பிறகு வந்தது தான். 2004 ஆண்டு தீபாவளி. பெங்களூரில் வேலை செய்து கொண்டிருந்தேன். பண்டிகை வந்துவிட்டாலே தமிழகத்துக்கு பேருந்து கிடைப்பது, அதுவும் புதுவைக்கு கிடைப்பது குதிரை கொம்பாக போய்விடும். பத்து நாட்களுக்கு முன்பே, 6 மணியில் இருந்து ஒன்னரை மணிநேரம் வரிசையில் நின்று, கிளம்ப வேண்டிய தினத்தில் நகரப்பேருந்து கிடைக்காமல் காத்திருந்து, கிடைத்த தானியும் நெரிசலில் சிக்கி நிற்க, கடைசி ஒரு கிலோமீட்டரை ஓடியே கடந்தேன். பெங்களூரில் அன்று தான் முதன்முதலில் எனக்கு வியர்த்தது. என்னையும் அறியாமல் ‘அம்மா! அம்மா’ என்று அரற்றிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக பேருந்தும் எங்கோ நெரிசலில் சிக்க, தாமதமாக வருமென சொன்னார்கள்.

எல்லோருக்கும் புத்தாடை வாங்கியிருந்ததால் பெரும் பையொன்றை முதுகில் சுமந்த படி பேருந்துக்காக காத்திருந்தேன். அம்மாவை தொலைபேசியில் அழைத்து நான் வர அனேகமாய் 5 மணிக்கு மேல் ஆகிவிடும். ஆக, எனக்காக எல்லோரும் காத்திருங்கள். நான் வாங்கி வந்த புத்தாடை அணிந்து தான் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் எப்போதும் 4.30 அல்லது 5 மணிக்கெல்லாம் தீபாவளி கொண்டாட்டம் இறுதி கட்டத்தை அடைந்து விடும். அதன் பின் காலை உணவு, தொலைகாட்சி மற்றும் ஒரு குட்டி தூக்கம் என்று கழியும்.

பேருந்து வருவதாய் தெரியவில்லை. மீண்டும் அழைத்து, ‘நீங்கள் தீபாவளி கொண்டாட்டங்களை துவங்குங்கள். நான் வந்து ஜோதியில் ஐக்கியமாகிறேன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அப்படி நீட்டி, நீட்டி.. 9 மணி பேருந்து 12 மணிக்குத்தான் வந்தது. 8 மணி வாக்கில் புதுவையை அடைந்த போது கிட்டதட்ட தீபாவளியே முடிந்திருந்தது. பரபரப்பாக, மிகவும் உணர்ச்சிமயமான ஒரு நாளாக எப்போதும் மனதில் இருக்கும் அந்த ஆண்டின் தீபாவளி

2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள்?
அமெரிக்காவின் கலிபோர்னியா என்ற மாகாணத்தில் walnut creek என்று ஊரில்.

த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?
பட்டாசு சத்தம் இல்லை, தமிழ் தொலைகாட்சியில் வழக்கம் போல் ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்கும் நடிகைகள் இல்லை, புது படங்களின் பதாகைகளோ கதாநாயகர்களின் ஆளுயர கட்-அவுட்கள் மற்றும் அதற்கு பாலாபிஷேகம் செய்யும் கோமாளித்தனங்கள்/அக்கிரமங்கள் இல்லை. மாறாக எத்தனை கூட்டமிருந்தாலும் கோவிலில் நடக்கும் அமைதியான வழிபாடுகள், நட்புகளின் சங்கமங்கள், தூர தேச அழைப்புகள் என்று கடந்தது.

புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
Great Mall, Milpitas, California. இங்கு தான் உடைகள் வாங்கினேன். பிரபலமான brandகள் உட்பட காணும் பல துணிமணிகள் ஆசிய நாடுகளில் தயாரிக்கப்பட்டவை தான் (இந்தியா, சீனா, வியட்நாம், இலங்கை, தாய்லாந்து..) ஆனால் நம்மூரில் நல்லது என்று வாங்கும் எல்லாமே வெளிநாட்டு Brandகள் தான். என்ன குழப்பமோ போங்க!

உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?
நண்பர் வீட்டில் அவர்களின் அம்மா வந்திருந்ததால் எல்லாமே வீட்டு பலகாரங்கள் தான். முறுக்கு, காராசேவு, பூந்தி, சுழியம் என்று அட்டகாசமான பலகாரங்கள்.

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)?

உறவினர்களுக்கு எல்லாம் தொலைபேசியில். நண்பர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் மூலம்

தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

தீபாவளியன்று அவ்வளவாக வெளியில் சுற்றுவதில்லை. வீதியெங்கும் வெடித்துக்கொண்டிருப்பார்கள். எப்போதாவது நண்பர்களை பார்க்க செல்வதுண்டு

இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம்?

பள்ளி நாட்களில் வருடந்தோறும் தீபாவளிக்கு அடுத்த நாள் பை நிறைய பலகாரங்கள் எடுத்து செல்வோம். பள்ளியிலிருந்து மொத்தமாய் பலகாரங்கள் ஏதாவது ஒரு தொண்டு இல்லத்திற்கு போகும். இப்போது அலுவலகத்திலும் அதே போல் தான். Corporate Social Responsibility மற்றும் Parivartan என்று நிறைய உதவிக்குழுக்கள் அலுவலகத்தில் உண்டு. போன வருட தீபாவளிக்கு ஒரு பெரும் அரங்கம் முழுதும் ஆதரவற்ற பிள்ளைகளை கூட்டி அருமையான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்

நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள்?
யார் எழுதியிருக்காங்க, யாரு எழுதலைன்னு ஒன்னும் புரியல. அதுனால் யாராவது விருப்பம் இருந்தால் தொடருங்க சாமீகளா !!

பி.கு. 1: “தீபாவளி..ஹோய்.. தீபாவளி” status messageஅ பாத்துட்டு, என்னது இதெல்லாம் என்று கார்த்திக் கேட்டான். சிவகாசி படத்துல அசின் பாடுற பாட்டுன்னேன். ‘Bro, Thats supposed to be Vijay's song' அப்படின்னு கடுப்பா சொல்லிட்டு போயிட்டான்.

பி.கு. 2: இரண்டாவது கேள்விக்கு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பதில் எழுத்திட்டேன். படிச்சு பார்த்தா எம்மா நீளத்திற்கு இருக்கு!! கண்டுகாதீங்க ;)

பி.கு. 3: கார்த்திக் மட்டும்தான் டிஸ்கியா போட்டு தள்ளுவானா? நாங்களும் பின் குறிப்பு போடுவோம்ல. (ம்ம், வர வர வயசு வகையறா எல்லாம் பாக்காம கண்டமேனிக்கு போட்டு போடுற மாதிரியாகி போச்சு)

15 September 2009

எண்ணங்கள்

உணவின் அருமை வீட்டிலிருக்கும் வரை புரிவதில்லை. வீட்டை கடந்து வாழும் நிமிடங்களில் மறுத்த உணவின் ஒவ்வொரு பிடியும் கைதட்டி சிரிக்கிறது. வீட்டு உணவிலேயே உய்வதிலும் ஒரு சங்கடம் இருக்கிறது. வெளிச்சாப்பாட்டை நீங்கள் ஒத்துக்கொள்ளவும், அந்த சாப்பாடு உங்கள் உடம்புக்கு ஒத்துக்கொள்ளவும் நேரமெடுக்கலாம்.

ஒழுங்கான உணவு முறையை கடைப்பிடிக்கையில் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், குறைந்தபட்ச உடலுழைப்பு இருந்தாலே போதுமானதாய் இருக்கிறது. ஆனால் உணவு சரியில்லாமல் போனால், தன்னை நிராகரித்த நாட்களில் சேர்த்து வைத்த வஞ்சத்தையும் எல்லாம் ஒட்டுமொத்தமாய் காட்டிவிடுறது உடல். உடற்பயிற்சியின் அவசியத்தை உணர இப்போதும் காலம் தவறிவிடவில்லை என்ற போதும் அதை பழக்கமாக்கிக் கொள்ள முடியாதபடி செய்யும் இந்த சோம்பேறித்தனத்தை எப்படி எதிர்கொள்வது?

நட்பு என்பது கட்டாயம் மனிதனுக்கு ஆசீர்வாதம் தான். மீண்டும் மீண்டும் என் வாழ்வில் காலம் அதை அழுந்த உணர்த்திக்கொண்டேயிருக்கிறது. முக்கியமாக தலை சாயும் நேரமெல்லாம் தன்னையறியாமல் தாங்கும் அவர்கள் தோள்களுக்கு ஈடாய் வேறெதுவும் இருக்கப்போவதில்லை. முக்கியமாக சுயநலத்தின் மொத்த உருவகமாக உலாவரும் மனிதர்களுடன் இருக்க நேரும் போதெல்லாம் சகமனிதர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை எரிந்து கருகும் போது அதை பீனிக்ஸ் பறவையாய் உயிர்ப்பிப்பது நண்பர்கள் தான்.

ரொம்ப புலம்பியாச்சு. இனி ஒரு மகிழ்வான செய்தி.

செப்டம்பர் 13 தேதியிட்ட கல்கி இதழில் என் காலயந்திரம் கவிதை 'எழுதப்படாத குறிப்புகள்' என்ற தலைப்பில் வெளியாகிருக்கிறது. பெரிதும் ஊக்கமாய் இருந்த தோழி கார்த்திகாவுக்கும், என் கவிதையை சட்டென அடையாளம் கண்டுகொண்ட கார்த்திகை பாண்டியனுக்கும், இதுக்காவது பதிவு எழுதுங்க! வர வர நீங்க வலைப்பதிவு வச்சிருக்கீங்கங்குறதே மறந்து போகுது என்று மிரட்டிய செல்லத்தம்பி கார்த்திக்கும் மிக்க நன்றி (அட! எல்லாரும் கார்த்தி தானா? :))

கடும் பணிச்சூழலுலிருந்து விடுபடும் காலம் வந்துவிடும் போலிருக்கிறது. வெகு சீக்கிரத்தில் இயல்பு மீண்டு(ம்) வரவேண்டும்

3 August 2009

நண்பர்கள் தின வாழ்த்துகள்

தினம் தினம் வாழ்க்கையை சுவாரசியப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு விசயம் நட்பு. பெரிய எதிர்ப்பார்ப்பகளின்றி, எந்தவித உடன்படிக்கைகளுமின்றி, சமயங்களில் எந்த கோட்டில் ஒன்றாய் இணைந்திருக்கிறோம் என்ற புரிதல் கூடயின்றி நட்பு என்ற காற்று வீசிக்கொண்டே தானிருக்கிறது, வாழ்க்கையை சோலையாக்கிக்கொண்டு தானிருக்கிறது.

என் அனைத்து நண்பர்களுக்கும் இந்த நட்பு கவிதைகள் அர்ப்பணம். அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

நட்பு

க‌வ‌ர்ந்திழுக்கும் ஆளையெல்லாம்
காத‌லித்துவிட‌ முடிவ‌தில்லை;
அவ்வ‌கையில்
ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌து ந‌ட்பு!

***

நீயொரு வண்ணம்
நானொரு வண்ணம்
நட்பு வானவில்

***

நெடும்பயணதிற்கு
ஆயத்தமான பொழுதொன்றில்
கடந்துவந்த பூமரத்தினடியில்
சில புன்னகைகளை விட்டுவந்தேன்

நான்
கடக்கவேண்டிய வழியெங்கிலும்
வேர்கள் பரப்பி
காத்துக்கொண்டிருக்கிறது
அதன் நிழல்

- மிக்க அன்புடன்
ச.பிரேம்குமார்

1 July 2009

நிழல்



நெடும்பயணதிற்கு
ஆயத்தமான பொழுதொன்றில்
கடந்துவந்த பூமரத்தினடியில்
சில புன்னகைகளை விட்டுவந்தேன்

நான்
கடக்கவேண்டிய வழியெங்கிலும்
வேர்கள் பரப்பி
காத்துக்கொண்டிருக்கிறது
அதன் நிழல்


- ச.பிரேம்குமார்

இந்த கவிதை 05-07-2009 தேதியிட்ட கல்கியில் வெளிவந்திருக்கிறது. இதற்காக பெரிதும் உதவிய தோழிக்கு மனமார்ந்த நன்றி

***என் பிரியமான நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்***

12 June 2009

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : காலயந்திரம்



காலச்சக்கரங்களை கட்டிக்கொண்டு
ஒருவழிப்பாதையில் விரைகிறது வாழ்க்கை

திசைமரமோ வழிகாட்டியோ
இல்லாத கணங்கள் பயம்நிறைந்ததாய் இருக்கின்றன
வேறு சாத்தியக்கூறுகளற்று பாதையின் போக்கிலேயே
போவதை துணிவென்று அறிவிக்கிறேன்

வனப்புமிகுந்த சோலைகளை தாண்டித்தான்
செல்கிறேன்ற போதிலும்
எதற்காகவும் நிற்பதாயில்லை
மீண்டும் அவற்றை கடக்க நேரிடுமென்றும்
நிதானிக்க நேரமில்லையென்றும்
சொல்லிக்கொள்ளலாம்

நினைவிலிருத்திக் கொள்ளமுடிந்தவைகளை
பயணத்தின் முடிவில் கட்டாயம்
குறித்து வைப்பதாய் முடிவு

இக்கணம் வரை
சேரப்போகும் முகவரி இதென்பதை மட்டுந்தான்
சர்வநிச்சயமாய் சொல்ல முடியவில்லை