
நெடும்பயணதிற்கு
ஆயத்தமான பொழுதொன்றில்
கடந்துவந்த பூமரத்தினடியில்
சில புன்னகைகளை விட்டுவந்தேன்
நான்
கடக்கவேண்டிய வழியெங்கிலும்
வேர்கள் பரப்பி
காத்துக்கொண்டிருக்கிறது
அதன் நிழல்
- ச.பிரேம்குமார்
இந்த கவிதை 05-07-2009 தேதியிட்ட கல்கியில் வெளிவந்திருக்கிறது. இதற்காக பெரிதும் உதவிய தோழிக்கு மனமார்ந்த நன்றி
***என் பிரியமான நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்***
1 July, 2009
நிழல்
பதித்தது : ச.பிரேம்குமார் 17 கருத்துக்கள்
12 June, 2009
திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : காலயந்திரம்

காலச்சக்கரங்களை கட்டிக்கொண்டு
ஒருவழிப்பாதையில் விரைகிறது வாழ்க்கை
திசைமரமோ வழிகாட்டியோ
இல்லாத கணங்கள் பயம்நிறைந்ததாய் இருக்கின்றன
வேறு சாத்தியக்கூறுகளற்று பாதையின் போக்கிலேயே
போவதை துணிவென்று அறிவிக்கிறேன்
வனப்புமிகுந்த சோலைகளை தாண்டித்தான்
செல்கிறேன்ற போதிலும்
எதற்காகவும் நிற்பதாயில்லை
மீண்டும் அவற்றை கடக்க நேரிடுமென்றும்
நிதானிக்க நேரமில்லையென்றும்
சொல்லிக்கொள்ளலாம்
நினைவிலிருத்திக் கொள்ளமுடிந்தவைகளை
பயணத்தின் முடிவில் கட்டாயம்
குறித்து வைப்பதாய் முடிவு
இக்கணம் வரை
சேரப்போகும் முகவரி இதென்பதை மட்டுந்தான்
சர்வநிச்சயமாய் சொல்ல முடியவில்லை
பதித்தது : ச.பிரேம்குமார் 22 கருத்துக்கள்
எழுத்து வகை: திரட்டி.காம் நட்சத்திரம்
11 June, 2009
திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : மனிதத்தைத் தேடி
ஒவ்வொரு நாளும் ஏதோவொரு இடத்தில் யாரேனும் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகிக்கொண்டே தானிருக்கிறார்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது வெறும் சொற்களில் மட்டுமே இருக்கிறது. எத்தனை தூரம் நாகரீகம் வளர்ந்திருந்தாலும் இன்னும் சகமனிதனை ஒரு உயிராய் கூட மதிக்க தெரியாதவர்கள் நிறைந்த உலகத்தில்,வாழ்வது கூட ஒரு பெரும் சாதனையாகத்தான் ஆகிவிடக்கூடும். சொல்வதற்கு புதிதாக ஏதுமில்லை, அல்லது அதற்கு மனம் ஒப்பவில்லை. அடுத்த தலைமுறைக்காவது மனித்தை கற்றுத்தர வேண்டிய கடமை நமக்கு பெரிதாக இருக்கிறது என்று ஒன்றை மட்டும் என்னால் சர்வ நிச்சயமாக சொல்ல முடியும். இப்போதைக்கு இனவெறி தாக்குதல்களுக்கு ஆளாகும் ஒவ்வொருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!
வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே!
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே!
வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்!
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!
துளியெல்லாம் கைகோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகளலெல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்
விடியாத இரவென்றும் வானில் இல்லை
ஒலியோடு ஒலி சேரட்டும்
பதித்தது : ச.பிரேம்குமார் 6 கருத்துக்கள்
எழுத்து வகை: திரட்டி.காம் நட்சத்திரம்
திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : சூப்பர் சிங்கர்களும் சிற்சில சிக்கல்களும்
விஜய் தொலைகாட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒரு வழியாக ஒரு வருடத்திற்கு பிறகு போன வாரம் முடிந்தது. போன முறை இறுதிகட்டத்தில் விமர்சனங்கள் வந்தன. ஆனால் இம்முறை ஆரம்பம் முதலே நிறைய விமர்சனங்கள். ஒரு சாராருக்கு மட்டுமே தான் வாய்ப்புகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குழு மனப்பாண்மை மனிதனின் ஆதி குணம். குகைகளில் வாழ்ந்த காலத்திலேயே தனக்கென்று ஒரு கூட்டத்தை அமைத்துக்கொண்டு அதனோடே வாழ்ந்து பழகியவர்கள். இன்னமும் அதன் பாதிப்பு பெரியளவு இருக்கவே செய்கிறது. இனப்பற்று என்பது நல்லது தான். ஆனால் அடுத்தவருக்கு தீங்கிழைக்காத வரை. அடுத்தவருக்கு துரோகம் இழைக்கப்படுகையில் ஒருவருக்கு பற்றுதலாக தோன்றுவது அடுத்தவருக்கு வெறியாகவும் அயோக்கியத்தனமாகவும் தோன்றலாம்
வேற்றுமொழி சுற்றுகள் இடம்பெற்ற போது அந்த மொழிகளுக்கான உச்சரிப்பில் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் தமிழ் உச்சரிப்பை பற்றி பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. உள்ளூரில் தமிழனுக்கு எப்போதும் மரியாதை குறைவாகவே கிடைக்கிறது.
அடுத்து இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்காக நடத்தப்படவுள்ளது. ஏற்கனவே போட்டி நிறைந்த உலகம் என்று சொல்லி சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு அழுத்தத்தை உண்டாக்க துவங்கிவிட்டார்கள். தோல்வியுறும் போதெல்லாம் கதறி அழும் குழந்தைகளை காண்கையில் மனம் கலங்குகிறது. அவர்களை தோல்வியுறுவதை காட்டிலும், இந்த சின்ன தோல்விக்கே மனம் துவண்டால் பின்னாளில் இவர்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற நினைக்கையில் பதற்றமாய் இருக்கிறது
நாள்தோறும் இப்படியான நிகழ்ச்சிகள் தொலைகாட்சிகளிலும், பள்ளி கல்லூரி வளாங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. நாளை நம் வீட்டு பிள்ளைகளும் இம்மாதிரி போட்டிகளில் கலந்து கொள்ளலாம். ஏதோ ஒரு முட்டாள்தனமான காரணத்திற்காகவோ அல்லது நடுவரின் இனவெறியினாலோ அவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்கள் நிலை என்னவாக இருக்கும்? உண்மையாகவே அவர்கள் தோல்வியுற்றாலும் அதனை எப்படி எடுத்துக்கொள்ள போகிறார்கள்? அந்த நிலையை எதிர்கொள்ளும் விதத்தை அவர்களுக்கு எடுத்துரைக்க நமக்கு பக்குவம் இருக்கிறதா?
பதித்தது : ச.பிரேம்குமார் 11 கருத்துக்கள்
எழுத்து வகை: திரட்டி.காம் நட்சத்திரம்
10 June, 2009
திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : திரையரங்குகளை தொலைத்த தெருக்கள்
பதித்தது : ச.பிரேம்குமார் 7 கருத்துக்கள்
எழுத்து வகை: திரட்டி.காம் நட்சத்திரம்



