12 December 2009

பிறந்த நாள் வாழ்த்துகள்


உன் பிறந்த நாளை மறந்துவிட்டு எத்தனையோ முறை உன்னிடம் குட்டு வாங்கியிருக்கிறேன்;
அப்போதெல்லாம் உணராத வலியினை திரட்டிவந்து கொல்கிறது இப்போது தவறாமல் வந்துவிடும்
உன் பிறந்த நாளின் நினைவு
***


பனிரெண்டு மணி தாண்டி அரைத்தூக்கத்தில் வாழ்த்துச் சொல்வதற்கே அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில் நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?



இதப்படிச்சு துக்கம் தொண்டைய அடைத்தால், அருட்பெருங்கோவின் 'பிறந்த நாள் வாழ்த்து' படிச்சு சந்தோசப்பட்டுக்கோங்க ;-)

இதுவொரு மீள்பதிவு!

10 December 2009

கவின்மிகு கலிபோர்னியா

சான் பிரான்சிஸ்கோவின் தங்கப் பாலம் (The Golden Gate) 1937ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அக்காலக்கட்டத்தில் அதுவே உலகின் மிக நீளமான தொங்குப்பாலமாக இருந்தது. அந்த இடத்தை தக்க வைத்து கொள்ளவில்லையென்ற போதும் இப்போதும் ஒரு மிக முக்கியமான சுற்றுலா தளமாகவும் சான் பிரான்ஸிஸ்கோவின் அடையாளமாகவும் திகழ்கிறது



அதன் பிரமாண்ட தோற்றமே அதன் சிறப்பு. அத்தனை பெரிய பாலம் நிற்பது வெறும் இரண்டே தூண்களில். அதை வடிவமைத்தவரை பாராட்ட வேண்டும். மேலும் அந்த பாலத்திற்கு எதற்கு இளஞ்சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த இளஞ்சிவப்பு நிறம் மாலை வெயிலில் காண வெகு அற்புதமாய் இருக்கும்.

இரவில் அதிக விளக்கு அலங்காரங்கள் கிடையாது. ஆனால் குறைந்த விளக்குகளிலும் அந்த இளஞ்சிவப்பு நிறம் மிக அழகாய், ரம்மியமாய் இருக்கும்.




தென் கலிபோர்னியாவின் வானிலை எப்போதும் மிதமானதாய் இருக்குமென்ற போதும், சான் பிரான்ஸிஸ்கோ ஒரு சின்ன குன்று என்பதால் அங்கே குளிர்ச்சி அதிகமாகவே இருக்கும். இருபுறமும் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் பாலத்தில் குளிர் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்

பாலத்தை சுற்றி நிறைய ‘Vista Point' உள்ளன. ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு விதமாய் அழகாய் தெரியும் அப்பாலம்.

பாலத்தின் எதிரே ஒரு சின்ன மலை உண்டு. அங்கிருந்து பாலத்தையும் அதன் போக்குவரத்தையும் ரசிக்கலாம். மேலிருந்து பார்க்க மேலும் அழகாய் தோன்றும் பாலம். இந்த கோணத்தை தமிழர்கள் அனேகம் பேர் பார்த்திருப்பார்கள். ஆம், ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சமீரா சூர்யாவிடம் தன் காதலை சொல்லும் போது பின்புலத்தில் இருப்பது தான் சான் பிரான்ஸிஸ்கோவின் தங்கப்பாலம்



Photo Courtesy : Girish Karunagaran

24 November 2009

அம்மா,அப்பா, வீடு நாய்குட்டி....

அம்மா அப்பா, வீடு நாய்குட்டி..... இதையெல்லாம் விட்டுட்டு வர முடியாது”. கொஞ்சம் நாட்களுக்கு முன்பு இது தான் என் ஜிடாக்’கில் Status messageஆக இருந்தது. நண்பன் ஒருவன் ‘என்னடா இது? என்ன உன் கணக்கு’ என்று கேட்டான். ‘என்ன கொடும சார் இது? அலைபாயுதே வசனம். ஷாலினி சொல்ற இந்த வசனத்தை எப்படி மறந்த’ என்று கேட்டேன். பிறகு சிறிது நேரத்திற்கு ‘அலைபாயுதே’ வில் அப்படி என்ன தானிருக்கிறது என்பதை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது இந்த படத்தை பார்த்துவிட்டு சொல், இது தான் பக்கா ரொமாண்டிட்க் படம் என்று ‘Before Sunrise' என்ற படத்தை பார்க்க சொன்னான்.

கதை என்று பெரிதாக ஒன்று இருப்பதாக கூட தோன்றவில்லை. ஒரு சம்பவம் தான். அமெரிக்க நாயகனும் ஐரோப்பா நாயகியும் தொடர்வண்டியில் சந்திக்கிறார்கள். நாயகன் நிறுத்தத்தில் இறங்கும் போது நாயகியையும் இறங்க சொல்லி கேட்கிறான். அன்றைக்கு முழுவதும் ஊர் சுற்றுகிறார்கள், கொஞ்சமாய் காதலிக்கிறார்கள்....இல்லை இல்லை ரொமான்ஸ் செய்கிறார்கள்

இந்த படத்தில் ஒரு காட்சியில் நாயகி நாயகனை தன் தோழியாக பாவித்து, எதிரதிரே அமர்ந்து கொண்டே தொலைபேசியில் பேசுவது போல் பாவனை செய்து, நாயகனை பற்றி தான் என்ன நினைக்கிறாள் என்பதை சொல்கிறாள்.

அதே...அதே வாலி படத்தில் அஜீத்தும் ஜோதிகாவும் ஊட்டியில் பேசுவார்களே. அதே போல் தான். ஹி ஹி ஹி

ஆனால் படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அதிலிருக்கும் இயல்புதன்மை தான். அவர்கள் உடல்மொழி, வசனங்கள் எல்லாமே அத்தனை இயல்பானவை.

முழு படமும் யூட்யூப்பில் காண கிடைக்கிறது:
http://www.youtube.com/watch?v=LNk4tRlco7Y

Before Sunset

கதை நடந்து 9 வருடங்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பது தான் இந்த sequel. உண்மையிலும் Before Sunrise எடுக்கப்பட்டது 1995ல். 9 ஆண்டுகள் கழித்து 2004ல் தான் Before Sunset வெளிவந்தது.

முதல் பாகம் நிறையவே romantic என்றால் இரண்டாம் பாகம் உளவியல்ரீதியாக நிறைய பேசும்.

படத்தை பார்க்க : http://www.youtube.com/watch?v=djmkher5G_I

விக்கிபீடியாவில் இத்திரைப்படங்கள் பற்றிய நிறைய சுவையான தகவல்கள் இருக்கின்றன
http://en.wikipedia.org/wiki/Before_Sunrise
http://en.wikipedia.org/wiki/Before_Sunset

4 November 2009

தீபாவளி.. ஹோய்.. தீபாவளி

தலைப்ப ஜிடாக்’கில் ஸ்டேடஸ் மெசேஜா வச்சிட்டு இந்த வானவில் வீதி காத்திக்’கிட்ட நான் பட்ட பாடு இருக்கே! அதை தெரிஞ்சுக்க நீங்க முழு பதிவையும் படிச்சுட்டு பதிவின் கீழ் பார்க்கலாம். அல்லது நேரே பி.கு வை மட்டுமே பார்க்கலாம்

உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

என்னத்த சொல்ல? எழுதும் கணத்தில் உலக மக்கட்தொகை 679 கோடி. அதில் நானும் ஒருவன். கடைசி வரைக்கும் மனிதனாகவே இருக்க விரும்பும் ஒருவன் என்று வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம்.

தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?
எப்பவும் மறக்க முடியாத தீபாவளி நான் வேலைக்கு சென்ற பிறகு வந்தது தான். 2004 ஆண்டு தீபாவளி. பெங்களூரில் வேலை செய்து கொண்டிருந்தேன். பண்டிகை வந்துவிட்டாலே தமிழகத்துக்கு பேருந்து கிடைப்பது, அதுவும் புதுவைக்கு கிடைப்பது குதிரை கொம்பாக போய்விடும். பத்து நாட்களுக்கு முன்பே, 6 மணியில் இருந்து ஒன்னரை மணிநேரம் வரிசையில் நின்று, கிளம்ப வேண்டிய தினத்தில் நகரப்பேருந்து கிடைக்காமல் காத்திருந்து, கிடைத்த தானியும் நெரிசலில் சிக்கி நிற்க, கடைசி ஒரு கிலோமீட்டரை ஓடியே கடந்தேன். பெங்களூரில் அன்று தான் முதன்முதலில் எனக்கு வியர்த்தது. என்னையும் அறியாமல் ‘அம்மா! அம்மா’ என்று அரற்றிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக பேருந்தும் எங்கோ நெரிசலில் சிக்க, தாமதமாக வருமென சொன்னார்கள்.

எல்லோருக்கும் புத்தாடை வாங்கியிருந்ததால் பெரும் பையொன்றை முதுகில் சுமந்த படி பேருந்துக்காக காத்திருந்தேன். அம்மாவை தொலைபேசியில் அழைத்து நான் வர அனேகமாய் 5 மணிக்கு மேல் ஆகிவிடும். ஆக, எனக்காக எல்லோரும் காத்திருங்கள். நான் வாங்கி வந்த புத்தாடை அணிந்து தான் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் எப்போதும் 4.30 அல்லது 5 மணிக்கெல்லாம் தீபாவளி கொண்டாட்டம் இறுதி கட்டத்தை அடைந்து விடும். அதன் பின் காலை உணவு, தொலைகாட்சி மற்றும் ஒரு குட்டி தூக்கம் என்று கழியும்.

பேருந்து வருவதாய் தெரியவில்லை. மீண்டும் அழைத்து, ‘நீங்கள் தீபாவளி கொண்டாட்டங்களை துவங்குங்கள். நான் வந்து ஜோதியில் ஐக்கியமாகிறேன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அப்படி நீட்டி, நீட்டி.. 9 மணி பேருந்து 12 மணிக்குத்தான் வந்தது. 8 மணி வாக்கில் புதுவையை அடைந்த போது கிட்டதட்ட தீபாவளியே முடிந்திருந்தது. பரபரப்பாக, மிகவும் உணர்ச்சிமயமான ஒரு நாளாக எப்போதும் மனதில் இருக்கும் அந்த ஆண்டின் தீபாவளி

2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள்?
அமெரிக்காவின் கலிபோர்னியா என்ற மாகாணத்தில் walnut creek என்று ஊரில்.

த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?
பட்டாசு சத்தம் இல்லை, தமிழ் தொலைகாட்சியில் வழக்கம் போல் ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்கும் நடிகைகள் இல்லை, புது படங்களின் பதாகைகளோ கதாநாயகர்களின் ஆளுயர கட்-அவுட்கள் மற்றும் அதற்கு பாலாபிஷேகம் செய்யும் கோமாளித்தனங்கள்/அக்கிரமங்கள் இல்லை. மாறாக எத்தனை கூட்டமிருந்தாலும் கோவிலில் நடக்கும் அமைதியான வழிபாடுகள், நட்புகளின் சங்கமங்கள், தூர தேச அழைப்புகள் என்று கடந்தது.

புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
Great Mall, Milpitas, California. இங்கு தான் உடைகள் வாங்கினேன். பிரபலமான brandகள் உட்பட காணும் பல துணிமணிகள் ஆசிய நாடுகளில் தயாரிக்கப்பட்டவை தான் (இந்தியா, சீனா, வியட்நாம், இலங்கை, தாய்லாந்து..) ஆனால் நம்மூரில் நல்லது என்று வாங்கும் எல்லாமே வெளிநாட்டு Brandகள் தான். என்ன குழப்பமோ போங்க!

உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?
நண்பர் வீட்டில் அவர்களின் அம்மா வந்திருந்ததால் எல்லாமே வீட்டு பலகாரங்கள் தான். முறுக்கு, காராசேவு, பூந்தி, சுழியம் என்று அட்டகாசமான பலகாரங்கள்.

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)?

உறவினர்களுக்கு எல்லாம் தொலைபேசியில். நண்பர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் மூலம்

தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

தீபாவளியன்று அவ்வளவாக வெளியில் சுற்றுவதில்லை. வீதியெங்கும் வெடித்துக்கொண்டிருப்பார்கள். எப்போதாவது நண்பர்களை பார்க்க செல்வதுண்டு

இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம்?

பள்ளி நாட்களில் வருடந்தோறும் தீபாவளிக்கு அடுத்த நாள் பை நிறைய பலகாரங்கள் எடுத்து செல்வோம். பள்ளியிலிருந்து மொத்தமாய் பலகாரங்கள் ஏதாவது ஒரு தொண்டு இல்லத்திற்கு போகும். இப்போது அலுவலகத்திலும் அதே போல் தான். Corporate Social Responsibility மற்றும் Parivartan என்று நிறைய உதவிக்குழுக்கள் அலுவலகத்தில் உண்டு. போன வருட தீபாவளிக்கு ஒரு பெரும் அரங்கம் முழுதும் ஆதரவற்ற பிள்ளைகளை கூட்டி அருமையான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்

நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள்?
யார் எழுதியிருக்காங்க, யாரு எழுதலைன்னு ஒன்னும் புரியல. அதுனால் யாராவது விருப்பம் இருந்தால் தொடருங்க சாமீகளா !!

பி.கு. 1: “தீபாவளி..ஹோய்.. தீபாவளி” status messageஅ பாத்துட்டு, என்னது இதெல்லாம் என்று கார்த்திக் கேட்டான். சிவகாசி படத்துல அசின் பாடுற பாட்டுன்னேன். ‘Bro, Thats supposed to be Vijay's song' அப்படின்னு கடுப்பா சொல்லிட்டு போயிட்டான்.

பி.கு. 2: இரண்டாவது கேள்விக்கு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பதில் எழுத்திட்டேன். படிச்சு பார்த்தா எம்மா நீளத்திற்கு இருக்கு!! கண்டுகாதீங்க ;)

பி.கு. 3: கார்த்திக் மட்டும்தான் டிஸ்கியா போட்டு தள்ளுவானா? நாங்களும் பின் குறிப்பு போடுவோம்ல. (ம்ம், வர வர வயசு வகையறா எல்லாம் பாக்காம கண்டமேனிக்கு போட்டு போடுற மாதிரியாகி போச்சு)

15 September 2009

எண்ணங்கள்

உணவின் அருமை வீட்டிலிருக்கும் வரை புரிவதில்லை. வீட்டை கடந்து வாழும் நிமிடங்களில் மறுத்த உணவின் ஒவ்வொரு பிடியும் கைதட்டி சிரிக்கிறது. வீட்டு உணவிலேயே உய்வதிலும் ஒரு சங்கடம் இருக்கிறது. வெளிச்சாப்பாட்டை நீங்கள் ஒத்துக்கொள்ளவும், அந்த சாப்பாடு உங்கள் உடம்புக்கு ஒத்துக்கொள்ளவும் நேரமெடுக்கலாம்.

ஒழுங்கான உணவு முறையை கடைப்பிடிக்கையில் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், குறைந்தபட்ச உடலுழைப்பு இருந்தாலே போதுமானதாய் இருக்கிறது. ஆனால் உணவு சரியில்லாமல் போனால், தன்னை நிராகரித்த நாட்களில் சேர்த்து வைத்த வஞ்சத்தையும் எல்லாம் ஒட்டுமொத்தமாய் காட்டிவிடுறது உடல். உடற்பயிற்சியின் அவசியத்தை உணர இப்போதும் காலம் தவறிவிடவில்லை என்ற போதும் அதை பழக்கமாக்கிக் கொள்ள முடியாதபடி செய்யும் இந்த சோம்பேறித்தனத்தை எப்படி எதிர்கொள்வது?

நட்பு என்பது கட்டாயம் மனிதனுக்கு ஆசீர்வாதம் தான். மீண்டும் மீண்டும் என் வாழ்வில் காலம் அதை அழுந்த உணர்த்திக்கொண்டேயிருக்கிறது. முக்கியமாக தலை சாயும் நேரமெல்லாம் தன்னையறியாமல் தாங்கும் அவர்கள் தோள்களுக்கு ஈடாய் வேறெதுவும் இருக்கப்போவதில்லை. முக்கியமாக சுயநலத்தின் மொத்த உருவகமாக உலாவரும் மனிதர்களுடன் இருக்க நேரும் போதெல்லாம் சகமனிதர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை எரிந்து கருகும் போது அதை பீனிக்ஸ் பறவையாய் உயிர்ப்பிப்பது நண்பர்கள் தான்.

ரொம்ப புலம்பியாச்சு. இனி ஒரு மகிழ்வான செய்தி.

செப்டம்பர் 13 தேதியிட்ட கல்கி இதழில் என் காலயந்திரம் கவிதை 'எழுதப்படாத குறிப்புகள்' என்ற தலைப்பில் வெளியாகிருக்கிறது. பெரிதும் ஊக்கமாய் இருந்த தோழி கார்த்திகாவுக்கும், என் கவிதையை சட்டென அடையாளம் கண்டுகொண்ட கார்த்திகை பாண்டியனுக்கும், இதுக்காவது பதிவு எழுதுங்க! வர வர நீங்க வலைப்பதிவு வச்சிருக்கீங்கங்குறதே மறந்து போகுது என்று மிரட்டிய செல்லத்தம்பி கார்த்திக்கும் மிக்க நன்றி (அட! எல்லாரும் கார்த்தி தானா? :))

கடும் பணிச்சூழலுலிருந்து விடுபடும் காலம் வந்துவிடும் போலிருக்கிறது. வெகு சீக்கிரத்தில் இயல்பு மீண்டு(ம்) வரவேண்டும்

3 August 2009

நண்பர்கள் தின வாழ்த்துகள்

தினம் தினம் வாழ்க்கையை சுவாரசியப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு விசயம் நட்பு. பெரிய எதிர்ப்பார்ப்பகளின்றி, எந்தவித உடன்படிக்கைகளுமின்றி, சமயங்களில் எந்த கோட்டில் ஒன்றாய் இணைந்திருக்கிறோம் என்ற புரிதல் கூடயின்றி நட்பு என்ற காற்று வீசிக்கொண்டே தானிருக்கிறது, வாழ்க்கையை சோலையாக்கிக்கொண்டு தானிருக்கிறது.

என் அனைத்து நண்பர்களுக்கும் இந்த நட்பு கவிதைகள் அர்ப்பணம். அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

நட்பு

க‌வ‌ர்ந்திழுக்கும் ஆளையெல்லாம்
காத‌லித்துவிட‌ முடிவ‌தில்லை;
அவ்வ‌கையில்
ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌து ந‌ட்பு!

***

நீயொரு வண்ணம்
நானொரு வண்ணம்
நட்பு வானவில்

***

நெடும்பயணதிற்கு
ஆயத்தமான பொழுதொன்றில்
கடந்துவந்த பூமரத்தினடியில்
சில புன்னகைகளை விட்டுவந்தேன்

நான்
கடக்கவேண்டிய வழியெங்கிலும்
வேர்கள் பரப்பி
காத்துக்கொண்டிருக்கிறது
அதன் நிழல்

- மிக்க அன்புடன்
ச.பிரேம்குமார்

1 July 2009

நிழல்



நெடும்பயணதிற்கு
ஆயத்தமான பொழுதொன்றில்
கடந்துவந்த பூமரத்தினடியில்
சில புன்னகைகளை விட்டுவந்தேன்

நான்
கடக்கவேண்டிய வழியெங்கிலும்
வேர்கள் பரப்பி
காத்துக்கொண்டிருக்கிறது
அதன் நிழல்


- ச.பிரேம்குமார்

இந்த கவிதை 05-07-2009 தேதியிட்ட கல்கியில் வெளிவந்திருக்கிறது. இதற்காக பெரிதும் உதவிய தோழிக்கு மனமார்ந்த நன்றி

***என் பிரியமான நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்***

12 June 2009

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : காலயந்திரம்



காலச்சக்கரங்களை கட்டிக்கொண்டு
ஒருவழிப்பாதையில் விரைகிறது வாழ்க்கை

திசைமரமோ வழிகாட்டியோ
இல்லாத கணங்கள் பயம்நிறைந்ததாய் இருக்கின்றன
வேறு சாத்தியக்கூறுகளற்று பாதையின் போக்கிலேயே
போவதை துணிவென்று அறிவிக்கிறேன்

வனப்புமிகுந்த சோலைகளை தாண்டித்தான்
செல்கிறேன்ற போதிலும்
எதற்காகவும் நிற்பதாயில்லை
மீண்டும் அவற்றை கடக்க நேரிடுமென்றும்
நிதானிக்க நேரமில்லையென்றும்
சொல்லிக்கொள்ளலாம்

நினைவிலிருத்திக் கொள்ளமுடிந்தவைகளை
பயணத்தின் முடிவில் கட்டாயம்
குறித்து வைப்பதாய் முடிவு

இக்கணம் வரை
சேரப்போகும் முகவரி இதென்பதை மட்டுந்தான்
சர்வநிச்சயமாய் சொல்ல முடியவில்லை

11 June 2009

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : மனிதத்தைத் தேடி

ஒவ்வொரு நாளும் ஏதோவொரு இடத்தில் யாரேனும் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகிக்கொண்டே தானிருக்கிறார்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது வெறும் சொற்களில் மட்டுமே இருக்கிறது. எத்தனை தூரம் நாகரீகம் வளர்ந்திருந்தாலும் இன்னும் சகமனிதனை ஒரு உயிராய் கூட மதிக்க தெரியாதவர்கள் நிறைந்த உலகத்தில்,வாழ்வது கூட ஒரு பெரும் சாதனையாகத்தான் ஆகிவிடக்கூடும். சொல்வதற்கு புதிதாக ஏதுமில்லை, அல்லது அதற்கு மனம் ஒப்பவில்லை. அடுத்த தலைமுறைக்காவது மனித்தை கற்றுத்தர வேண்டிய கடமை நமக்கு பெரிதாக இருக்கிறது என்று ஒன்றை மட்டும் என்னால் சர்வ நிச்சயமாக சொல்ல முடியும். இப்போதைக்கு இனவெறி தாக்குதல்களுக்கு ஆளாகும் ஒவ்வொருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.



மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே!
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே

காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

துளியெல்லாம் கைகோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகளலெல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்

விடியாத இரவென்றும் வானில் இல்லை
ஒலியோடு ஒலி சேரட்டும்

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : சூப்பர் சிங்கர்களும் சிற்சில சிக்கல்களும்

விஜய் தொலைகாட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒரு வழியாக ஒரு வருடத்திற்கு பிறகு போன வாரம் முடிந்தது. போன முறை இறுதிகட்டத்தில் விமர்சனங்கள் வந்தன. ஆனால் இம்முறை ஆரம்பம் முதலே நிறைய விமர்சனங்கள். ஒரு சாராருக்கு மட்டுமே தான் வாய்ப்புகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குழு மனப்பாண்மை மனிதனின் ஆதி குணம். குகைகளில் வாழ்ந்த காலத்திலேயே தனக்கென்று ஒரு கூட்டத்தை அமைத்துக்கொண்டு அதனோடே வாழ்ந்து பழகியவர்கள். இன்னமும் அதன் பாதிப்பு பெரியளவு இருக்கவே செய்கிறது. இனப்பற்று என்பது நல்லது தான். ஆனால் அடுத்தவருக்கு தீங்கிழைக்காத வரை. அடுத்தவருக்கு துரோகம் இழைக்கப்படுகையில் ஒருவருக்கு பற்றுதலாக தோன்றுவது அடுத்தவருக்கு வெறியாகவும் அயோக்கியத்தனமாகவும் தோன்றலாம்

வேற்றுமொழி சுற்றுகள் இடம்பெற்ற போது அந்த மொழிகளுக்கான உச்சரிப்பில் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் தமிழ் உச்சரிப்பை பற்றி பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. உள்ளூரில் தமிழனுக்கு எப்போதும் மரியாதை குறைவாகவே கிடைக்கிறது.

அடுத்து இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்காக நடத்தப்படவுள்ளது. ஏற்கனவே போட்டி நிறைந்த உலகம் என்று சொல்லி சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு அழுத்தத்தை உண்டாக்க துவங்கிவிட்டார்கள். தோல்வியுறும் போதெல்லாம் கதறி அழும் குழந்தைகளை காண்கையில் மனம் கலங்குகிறது. அவர்களை தோல்வியுறுவதை காட்டிலும், இந்த சின்ன தோல்விக்கே மனம் துவண்டால் பின்னாளில் இவர்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற நினைக்கையில் பதற்றமாய் இருக்கிறது

நாள்தோறும் இப்படியான நிகழ்ச்சிகள் தொலைகாட்சிகளிலும், பள்ளி கல்லூரி வளாங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. நாளை நம் வீட்டு பிள்ளைகளும் இம்மாதிரி போட்டிகளில் கலந்து கொள்ளலாம். ஏதோ ஒரு முட்டாள்தனமான காரணத்திற்காகவோ அல்லது நடுவரின் இனவெறியினாலோ அவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்கள் நிலை என்னவாக இருக்கும்? உண்மையாகவே அவர்கள் தோல்வியுற்றாலும் அதனை எப்படி எடுத்துக்கொள்ள போகிறார்கள்? அந்த நிலையை எதிர்கொள்ளும் விதத்தை அவர்களுக்கு எடுத்துரைக்க நமக்கு பக்குவம் இருக்கிறதா?

10 June 2009

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : திரையரங்குகளை தொலைத்த தெருக்கள்

நட்சத்திர வாரத்தில் புதுவையை பற்றி எழுதாவிட்டால் எப்படி? ஆனால் என்னவென்று எழுதுவது. எதை எழுதினாலும் அதோடு கலந்திருக்கும் என் பால்யமும் என் பதின்மங்களும் என்னை அதனோடு இழுத்துக்கொண்டு பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்துவிடும். நான் நினைவுகளில் தொலைந்து போகக்கூடும்.


புதுவை என்றாலே பலருக்கு பல விசயங்கள் நினைவுக்கு வரும். அதன் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை, பியர், அன்னை.. இன்னும் பல


அவற்றை தவிர இன்னொன்றும் மிக பிரபலமாக ஒரு காலத்தில் இருந்தது; திரையரங்குகள். புதுவையின் நகரப்பகுதி மிகவும் சிறியது. (இப்போதைய புதுவையின் எல்லை மிகவும் விரியவடைந்து விட்டது. முழுக்கவே நகரமயமாகிவிட்டது). நகர பகுதியை சுற்றியிருக்கும் நான்கு பிரதான சாலைகளையும் (Boulevard) நீங்கள் நடந்தே கூட சுற்றிவரலாம். ‘எல்லா சாலைகளும் ரோமில் தான் முடியும்’ என்று ஒரு ஆங்கில பழமொழியுண்டு. புதுவையின் நகரப்பகுதியின் எல்லா சாலைகளுமே கடற்கரையில் தான் முடியும்.


அந்த நான்கு பிரதான சாலைகளிலும் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் ஏகப்பட்ட திரையரங்குகள் உண்டு (அப்போது!). அனேகமாய் அனைத்திலும் கூட்டம் இருக்கவே செய்யும். எப்படி புதுவையில் குடிப்பவர்களில் முக்கால்வாசி பேர் வேற்று நகரவாசிகளோ, அப்படியே திரையரங்களிலும் நிறைய வெளியூர்காரர்களை காணலாம். சொந்த பந்தம் எல்லாம் புதுவை வருகையில் கட்டாயம் ஒரு திரைப்படத்தையாவது பார்த்து விட்டுத்தான் செல்வர். ஒரு திரையரங்கில் நெரிசலெனில் நடந்தே அடுத்த திரையரங்கித்திற்கு சென்றுவிடலாம். ஆனால் காலம் தீட்டும் ஓவியத்தில் வண்ணங்களும் உருவங்களும் மாறிக்கொண்டே தானிருக்கும். இப்போது புதுவையில் உருப்படியான திரையரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பல திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும், உல்லாச விடுதிகளாகவும் மாறிவிட்டன.


குறிப்பாக ’ஆனந்தா’ திரையரங்கு இடிக்கப்பட்ட போது என்னவோ போல் இருந்தது. இளநிலை படிக்கையில் அங்கு எத்தனையோ திரைப்படங்களை பார்த்திருக்கிறோம். ஒவ்வொன்றும் ஒரு அனுபவம். திரைப்படங்கள் மேல் பெரிதாக மோகம் ஒன்றுமில்லை. ஆனால் எங்கள் உச்சக்கட்ட பொழுதுபோக்கே அது தான். அப்போதைக்கு எங்களுக்கு அவ்வளவு தான் Exposure இருந்தது :-)


சில நாட்களுக்கு முன் நண்பன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்தேன். இப்போது ஜப்பானில் இருக்கிறான். பொழுது போக என்னடா செய்யுறன்னு கேட்டதற்கு, “இணையத்தில் தான் தேடித்தேடி படமா பாத்துக்கிட்டு இருக்கேன்”ன்னு சொன்னான். ஏண்டா? அங்கயெல்லாம் திரையரங்கு இல்லையான்னு கேட்டதுக்கு “நீ வேற, பத்து ரூபாய்க்கு படம் காட்ட மாட்டாங்களாம்டா, நாமெல்லாம் பத்து ரூபாய்க்கு படமும் பாத்துட்டு பார்க்கார்னும் சாப்டவுங்களாச்சே! இதெல்லாம் வேலைக்கு ஆகாதுடா” அப்படீங்கிறான். அடப்பாவீகளா, உங்க நக்கலு மாறவே மாறாதாடா?

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : கேள்விகள் ஆயிரம்

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
நடுவண் அரசில் வேலை செய்ததால் ஒரு இந்தியப் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பி அப்பா வைத்தது. என் பெற்றோர் ஆசையாக இட்ட பெயரை பிடிக்கவில்லை என்று சொல்வது அயோக்கியத்தனம் என்றே நினைக்கிறேன்

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
என் அம்மாச்சி இறந்த போது. விடுமுறைக்கு செல்லும் போதெல்லாம் எங்களுக்கு பல கதைகள் சொல்லி, வகைவகையாய் சமைத்து போட்டுவர் வாய்க்கு அரிசி போட்ட போது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
என் கையெழுத்து அழகாக இருப்பதாக பலர் கூறியிருக்கின்றனர். ஆனால் கல்லூரிக்கு பிறகு எழுதுவது வெகுவாக குறைந்துவிட்டது. இப்போ கொஞ்சம் கிறுக்க ஆரம்பித்துவிட்டேன்

4.பிடித்த மதிய உணவு என்ன?
வீட்டில் சமைத்தது எதுவும்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
பலரை எனக்கு பாத்தவுடனேயே ரொம்ப பிடிச்சிரும். ஆனா நட்பு பலப்பட சில காலம் பிடிக்கலாம்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
நீச்சல் தெரியாதெனிலும் கடலில் நெஞ்சளவு தண்ணீரில் இறங்கி குளிப்பதுண்டு.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்கள் எப்படி பேசுகிறார்கள்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விசயத்தை மத்தவங்க தான் சொல்லனும்
பிடிக்காதது கோபமும் சோம்பேறித்தனமும்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது அவள் அன்பு. பிடிக்காதது அவள் கோபம்

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
பொழில்குட்டி

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
சாமி படத்துல “பாஸ்போர்ட சைஸ் படம் தானேன்னு நான் அன்னிக்கு பேண்ட் கூடத்தான் போடலை” அப்படீங்கிறது தான் நினைவுக்கு வருது :)

12.என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பக்கத்துல ஒரு பயபுள்ள என்னமா கடலை போடுறான். அப்படி என்னதான் பேசுவானுங்களோ? ;)

14.பிடித்த மணம்?
தன் வீட்டை மட்டும் சுத்தமாய் வைத்துக்கொண்டு தெருவில் குப்பையை கொட்டி வைப்பதனால் வரும் வாடையை சுத்தமா பிடிக்காதுன்னு மட்டும் சொல்ல முடியும். பிடித்ததுன்னு குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
கிட்டதட்ட பறவை காய்ச்சல் மாதிரி இந்த பதிவும் படுபயங்கரமா பரவியிருக்கு. யார் எழுதினாங்கன்னு, யாரு எழுதலைன்னு தெரியல

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ? ராமின் “நாங்க போலீஸ்காரங்க” பதிவுகள். தமிழில் பதிவெழுதும் (எனக்கு தெரிந்த) ஒரேயொரு காவல்துறை அதிகாரி
வானவில் வீதியில் ரொம்ப பிடித்தது அவன் கல்லூரி பதிவுகள். தற்சமயம் பிடித்தது ‘தனிமையின் விலை’ தொடர்கதை :)

17. பிடித்த விளையாட்டு?
வீடியோ கேம்ஸ்

18.கண்ணாடி அணிபவரா?
ஆம்! இதனால் நீங்க நாட்டுக்கு சொல்ல வருவது??? ;)

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
சண்டையும் ஆபாசமும் இல்லாத படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன். அதொரு அற்புத அனுபவமாய் வாய்த்துவிட்டது

21.பிடித்த பருவ காலம் எது?
கோடை காலம்

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போதைக்கு ஒன்றுமில்லை

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது சிரிப்பு சத்தம்.கூச்சலும் குழப்பமும் அமைதியற்ற சூழலும் மிகுந்த வேதனை தரும்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருந்திருக்கலாம். ஆனால் எதையும் உணர்ந்து முழுமூச்சாக ஈடுபட்டதில்லை

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
வன்முறை

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
புதுவை கடற்கரை

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
சமூகத்துக்கு உதவியாக

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அவளை பற்றி நினைப்பது

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழுங்கள், வாழ விடுங்கள்

எதுக்குன்னே புரியாம இரண்டு கேள்விகள் இருந்துச்சு. அவற்றை சாய்ஸில் விட்டுட்டேன் :-) நட்சத்திர வாரத்திலா இந்த பதிவை எழுதுவது என்று கேட்டால், வழிவதை தவிர வேறு வழியில்லை எனக்கு!! தொடர்ந்து கேள்விகள் கேட்டல் என்னவோ எனக்கு பிடிப்பதில்லை. நீங்க எல்லாம் அப்படி தான் தேர்வுகள் எழுதி படிப்ப முடிச்சீங்களோன்னு கேள்வி வருவதுண்டு. அதனால் இந்த முப்பது கேள்விகள் கூட தாவு தீர்ப்பதாகவே இருந்தன. அதனால் தான் இப்படியொரு தலைப்பு :-))

9 June 2009

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : பனியில் கரைதல்



குளிர் அலுத்துவிட்ட
பனிப்பிரதேசத்தின் சன்னலொன்றை
பிடிவாதமாய் தட்டுகிறது சூரியன்.
கண்ணாடிகளை ஊடுருவி
அறையை நிரப்பப் பார்க்கிறது வெம்மை.
அதிகரித்துக் கொண்டிருக்கும் கதகதப்பு
பிடித்தமானதாய் இருக்க
இனி மொத்தமாய் பனியை வெறுத்துவிட
துணிகிறேன்

அடைக்க மறந்த ஏதோவொரு இடுக்கின்வழி
மெல்லக் கசியும் பனிக்காற்று
கதகதப்பின் உச்சத்தில்
நான் கரைந்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகளை
வேரறுத்துக் கொண்டிருக்கிறது

- ச.பிரேம்குமார்

இதை எழுதி வெகு காலமாயிற்று. சில நெருங்கிய நண்பர்களுக்கு இந்த கவிதையின் வரிகள் ஏற்கனவே பழக்கமாகியிருக்கலாம். சஞ்சிகைகளுக்கு அனுப்பி பலனில்லாது போக மின்னஞ்சல் பெட்டியிலேயே கிடந்தது. புதிதாக எழுத இயலாமல் போகவே இதையிங்கு இட்டு நிரப்பிவிட்டேன்

6 June 2009

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : அறிமுகம்

சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்து, பின் பிரான்சின் பலகணி என்று சொல்லப்படும் புதுவையில் வளர்ந்தேன். கணினித்துறையில் பணி என்பதால் பெங்களூரில் சில காலம் கழித்துவிட்டு தற்போது சென்னையில் குடியேறியாகிவிட்டது.

கூட்டுப்புழுவாய் என் சிறு உலகத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தேன். சமூக கோபங்களும், சமூகம் குறித்தான எண்ணங்களும் இருந்த போதிலும் பெரிதாக அதை வெளிப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் இருந்ததில்லை. அல்லது பெரிதாக நான் முயன்றதில்லை. வலையுலக அறிமுகம் கிடைத்த பின் தான் என் உலகம் சற்று விரிய தொடங்கி இருக்கிறது. ஒத்த கருத்துடைய நண்பர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாள் தோறும் புதிதாக எதோ ஒன்றை கற்று கொண்டிருக்கிறேன். மனித மனங்களின் அழகையும், வக்கிரங்களையும் ஒரு சேர நாள் தோறும் எங்கேனும் காண கிடைத்து கொண்டே தான் இருக்கிறது.

இலக்கிய உலகம் கடலேனில் அதன் ஒரு கரைக்கு வெளியே நின்று கொண்டு அதன் அழகை கண்டு ரசிக்க துடித்து கொண்டிருக்கிறேன். அவ்வப்போது ஆசையில் அதில் கால் நனைக்க நினைப்பதுண்டு. ஆனாலும் இன்னும் இறங்கி குளிக்கவும், அதன் ஆழங்களை அலசவும் முயன்றதில்லை. இன்னும் நிறைய காலம் தேவைப்படலாம்.
இந்த நட்சத்திர வாரத்தில் என் வலைப்பக்கங்களில் எழுதிப்பகிர என்ன காத்திருக்கிறது என்று தெரியவில்லை. மொழியோடு பயணிக்கும் என் பாதையில் இதொரு வசந்த காலமாய் இருக்கவும் செய்யலாம்.

முதன் முதலாய் வெங்கடேஷ் அண்ணாவை புதுச்சேரி வலைப்பதிவர் சந்திப்பில் தான் சந்தித்தேன். புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிக்கூடத்தில் வேலைகளுக்கு நடுவே நழுவி உணவகத்தில் அவசரமாய் உணவருந்தி வந்ததும், கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டு கல்லூரி மாணவர்களைப் போல் அரட்டை அடித்துக்கொண்டிருந்ததையும் மறக்க முடியாது தானே அண்ணா :-)

அப்போது தூரிகா வலைப்பூவில் எழுதிக்கொண்டிருந்தார். திரட்டி.காம் வேலைகள் ஆரம்பித்திருந்தன. அப்போதே வாரம் ஒரு வலைப்பூ என்று ஒரு பகுதி வைக்கப் போகிறோம். உன் வலைப்பூ தான் முதலாவதாக இருக்கும் என்று சொன்னார். இடையில் சிறிது காலம் வேலைப்பளுவில் சிக்கி அவருடன் பேச இயலாது போனது. ஆனாலும் திரட்டி.காம் நட்சத்திரப்பதிவுகள் ஆரம்பிக்கும் போது முதல் மடலை எனக்கு அனுப்பி என் விவரங்கள் கேட்டார். அண்ணா, எத்தனை நன்றி சொன்னாலும் போதாது உங்களுக்கு. ஆனால் நீங்கள் கேட்ட விவரங்களை சரியான நேரத்திற்கு அனுப்ப இயலாது போனது. அதற்கான மன்னிப்பையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்(சொக்கா, திரட்டி.காம்’மின் முதல் நட்சத்திர பதிவர் அப்படீன்னு சொல்லிக்க முடியாதே :-)))

2 June 2009

செல்வேந்திரனும் நானும் நண்பர்கள் இல்லை

அருகாமையில் இருக்கும் நபர்களிடம் நட்பு பாராட்டாமல் அதென்ன ஆர்குட், வலைதளங்கள் என்று நட்பை தேடுவது என்று கேட்கிறார் செல்வேந்திரன். உண்மை தான். பல சமயங்களில் நமக்கென்று ஒரு உலகத்தை அமைத்துக்கொண்டு சுற்றியிருப்பவர்களை மறந்துவிடுகிறோம். இருக்கும் இடத்தை விட்டு நம்மை தனிமைப்படுத்திக் கொள்கிறோம். அது எத்தனை கொடுமையானது என்று யோசித்து பார்க்கையில் விளங்கியது. சுற்றத்தை மறந்து, அதோடு ஒன்றி வாழாமல் இருக்கும் வாழ்க்கையில் என்ன இருந்துவிடப் போகிறது

ஆனால் இந்த இணைய நட்புகள் எல்லாமே அபத்தம், வெட்டி வேலை என்பது போன்ற ஒரு தோற்றம் செல்வாவின் கருத்துகளை மேலோட்டமாக பார்க்கையில் தோன்றலாம். இக்கருத்துக்கு எப்போதுமே எனக்கு முரண்படுவதுண்டு. உயிருக்குயிரான நண்பனாகவே இருந்தாலும் ரசனைகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ரசனைகளில் நீங்களும் உங்கள் நண்பரும் இரு வேறு துருவங்களாய் இருக்கலாம். இலக்கியத்தேடல் அதிகமாய் உங்களுக்கு தினத்தந்தியின் சிந்துபாத் தான் அதிகபட்ச இலக்கியம் என்று நம்பிக்கொண்டிருப்பவர் நண்பனாக அமைந்தால்?

உங்களுக்கு முடியலத்துவத்தை எழுத ஆனந்த விகடனில் இடம் ஒதுக்குகிறார்கள். கவிதை எழுதினால் படிக்க தான் மட்டுமே இருக்கும் சூழலுடையவர்கள் என்ன செய்வார்கள்? தமிழ் என்று ஒரு மொழி இருப்பது கூட அறியாவதர்கள் மத்தியில் உங்கள் மொழியை மறக்காமல் இருக்க என்ன வழியிருக்கிறது? ஒத்தக் கருத்துடைய நண்பர்களை இனங்காண, ரசனைகளை பகிர்ந்துக்கொள்ள இணையம் ஒரு நல்ல இணைப்பாக இருந்தே வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை



செல்வேந்திரன் கலந்து கொண்ட நீயா நானா நிகழ்ச்சியின் காணொளி

இந்த இணையமும் வலைப்பூக்களும் அதில் வரும் நட்புகளும் இல்லாமல் போயிருந்தால் பதிவின் தலைப்பை தான் நான் சொல்ல வேண்டியிருந்திருக்கும். ஆனால் இப்போது என் நண்பர் தொலைகாட்சியில் தோன்றுகிறார் என்று பெருமையாய் சொல்லிக்கொள்ள முடிகிறது

குட்டிச்சாத்தான்(குளத்தான்)க்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

15 May 2009

நேசம் முடிவுற்ற ஓரிரவில்



நேசம் முடிவுற்ற ஓரிரவில்
மொட்டை மாடியில் குப்புறக்கிடந்தேன்

17வது குறுந்தகவலின் பாதிப்பு இன்னும்
இருக்கிறது

வானவில்லை எதிர்பார்த்து புகையை
இழுத்தபடி கிடக்கலாம்
கொலை செய்வதாகவோ அல்லது தற்கொலைக்கு
முயல்வதாகவோ கனவில் தொலையலாம்

எதிரில் நீண்டுகிடக்கும் பயணம்
நினைவுவந்த வேளையில்
விடிந்துவிட்டது புதிதாய் கடக்கக் காத்திருக்கும்
இன்னொரு நாள்!

- ச.பிரேம்குமார்

என்ன கொடுமை இதென்று நீங்கள் கேட்பது புரிகிறது. வேறொன்றுமில்லை. தம்பிகள் கார்த்திக் மற்றும் சரவணக்குமாரின் கவிதைகள் தந்த தாக்கம் தான். அவர்கள் எழுதியவைகள் கவிதைகள். இது ஜஸ்ட் மொக்கை ;-)

13 May 2009

நான் வாக்களிக்க மாட்டேன்

இந்நேரம் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கும். வாக்குப் பதிய தகுதியுடைய அனைவரும் கட்டாயம் உங்கள் வாக்கினை பதிந்துவிடுங்கள். கொஞ்சம் யோசித்து வாக்கியளியுங்கள். பேய்க்கு வாக்கப்படுறதா இல்லை பிசாசுக்கு வாக்கப்படுறதாங்குற நிலைமையில் தான் நாம் இருக்கோம். ஆனாலும் இரண்டுல எது பரவாயில்லைங்குறத பொறுத்து தான் முடிவுகள் இருக்கும் என்று நம்புறேன். நான் அதிகம் எதிர்பார்ப்பது தென்சென்னையில் போட்டியிடும் சரத்பாபுவை தான். அவர் வெற்றி பெற வாழ்த்துகள்

***

இத பத்தி ரொம்ப காலமா எழுதனும்னு நினைச்சேன். ஆனா அப்படியே விட்டு போயிடுச்சு. இந்த பதிவு அதுக்கு சரியான இடம்தான். எல்லா தொலைகாட்சிகளிலும் ஏதாவது ஒரு போட்டி. சரி வச்சு தொலையட்டும்னா கடைசியில மக்கள குறுஞ்செய்திகள் மூலமா வாக்களிக்க சொல்லி ஒரே புலம்பல்கள். சரி சாதாரண மக்கள் அப்படி கேட்டாலும் பரவாயில்லை. பிரபலங்கள் ஆடும் நிகழ்ச்சிகளிலும் அப்படித்தான் விழுந்து புரண்டு வாக்கு கேக்குறாய்ங்க. நீங்க காசு வாங்கி ஆடுவீங்க, ஜெயிச்சாலும் சுளையா பணத்த அள்ளிக்கிட்டு போயிடுவீங்க. இதுக்கு மக்கள் வாக்களிக்கனுமா? அதெப்படிய்யா வாக்கு என்று வந்துவிட்டாலே மக்கள் ஏமாளிங்க தான்னு முடிவெடுத்துடுறீங்க?

****

இப்போது நம்ம பதிவுலகத்திலயும் இந்த வாக்கு ஜீரம் தீவிரமா பரவியிருக்கு. தமிழ்மணத்துலயும் தமிழிஷ்லயும் வாக்களியுங்கன்னு மக்கள் எல்லா வகையிலயும் கேக்குறாங்க. சில பேர் கொலை மிரட்டல் கூட விடுறாங்க. நம் பதிவுகள் பலரை சென்றடைய வேண்டும் என்பது தான் வலைப்பதிவெழுதும் எல்லோருடைய எண்ணமும். ஆனால் வாக்களியுங்கள் என்று கொலை மிரட்டல் விடுவது சில சமயம் சிரிப்பை வரவழைக்கிறது. அதிலும் நிறைய குளறுபடிகள் இருப்பதாக படிக்கிறேன். அந்த வாக்களிப்பில் எனக்கு ஏனோ நம்பிக்கையும் இல்லை. நான் தொடர்ந்து படித்து வரும் அத்தனை நண்பர்களின் பதிவுகளையும் அவர்களின் எழுத்துக்களுக்காகவே படிக்கிறேன். அவர்கள் எழுத்துக்களுக்கு ரசிகன் நான். ஆனால் எந்நாளும் தமிழ்மணத்திலோ தமிழிஷிலோ வாக்களித்தது இல்லை. இனிமேலும் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறேன் ;)

6 May 2009

திறமை, ஜொள்ளு, காதல் மற்றும் இன்னபிற

சமீபத்தில் நண்பன் ஒருவன் மூலம் இந்த காணொளியை காண நேர்ந்தது. இன்று வரை தினம் ஒரு முறையாவது அதை பார்த்து விடுகிறேன். அத்தனை சிறப்பாக இருக்கிறது



* சில இடங்களில் திரைப்படத்தில் இடம் பெற்றதை விட சிறப்பாக செய்திருக்கிறார்கள்

* காதல் சொட்ட சொட்ட ஒரு பாடல் இருக்க வேண்டும் என்றால் இதை பார்க்கலாம். எந்த வித அலங்காரங்களுமில்லாமல் ஒரு அழகான காதல் பாடலை தர முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்

* இப்போதெல்லாம் தொலைக்காட்சியில், மேடைகளில் கூட காதல் பாடலுக்கான நடனம் ஆபாசத்துடன் தான் அமைக்கப்படுகிறது. அந்த வகையில் இது எவ்வளவோ மேல்

* இதில் வரும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று சொன்னால் எனக்கு அடிவிழக்கூடும். ஆக மற்றவர்கள் அதை கூறலாம்

* இதில் வரும் ஆண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று சொன்னால் வேறு மாதிரி ஆகிவிடும். ஆக, அந்த பொறுப்பை தோழிகளிடம் விட்டுவிடலாம். ஆனால் முதலில் ஆடும் ஆணின் Grace மிகவும் அற்புதமாக இருந்தது. கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது

* பதிவு போட சிறப்பாக எதுவும் கிடைக்கவில்லையென்பதால் இப்படி ஒரு மொக்கைப் பதிவு. வானவில் வீதியில் மட்டும் தான் படங்காட்டுவாங்களா என்ன? நாங்களும் காட்டுவோம்ல ;-)

17 April 2009

ஆ.வி.யில் கவிதை எழுதிய பாவி

சமீபத்தில் மென்பொருள் துறையினர் பற்றி செல்வேந்திரன் ஆனந்த விகடனில் ஒரு கவிதை எழுதியிருந்தார். கவிதையின் கருத்தில் உண்மை இருந்தாலும், அதையே ஒரு மென்பொருள் துறை சார்ந்தவன் எழுதியிருந்தால் கைகொட்டி சிரித்திருப்பார்கள். சுய பச்சாதாபத்தில் பிதற்றுகிறோம் என்று கிழித்திருப்பார்கள். கவிதையில் செல்வா சற்று மிகைப்படுத்தியிருந்தாலும், அவருக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. இன்னொன்றும் சொல்ல வேண்டும் “செல்வா, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”

ஆனாலும் ஒரு கொலவெறியோட அதற்கு ஒருவர் எதிர்கவுஜ எழுதி விகடனில் எழுதியிருக்கிறார். (அப்போ விகடனில் கவிதை எழுதுவது சுலபம் தானா? நாமளும் முயல வேண்டியதுதான்)

அவர கேக்கனும் நினைக்கிற கேள்வி, ‘ஏஞ்சாமி, எத்தன நாள் தான் அரச்ச மாவையே அரைப்பீங்க? புதுசா ஏதாச்சும் சொல்லுங்களேன், அப்புறம், பேனா கையில் கிடைச்சா எது வேணும்னாலும் எழுதலாமா?’ ...எப்படியோ ஆ.வி எழுதின அந்த பாவி(பாசமிகு எதிர்வினையாளரு)க்கு வாழ்த்துகள்

(சும்மா ஒரு எதுகைக்காக தலைப்பு வச்சாச்சு. அதையும் எப்படியோ சமாளிச்சாச்சு)

***

பின்நவீனத்துவம் என்றாலே கொஞ்சம் பீதி தான் எனக்கு. வாசிப்பனுவத்தின் குறைபாடாக கூட இருக்கலாம். அப்படித்தான் பெரும்பாலும் இலக்குவண் ராசாவின் கவிதைகளை புறந்தள்ளி இருக்கிறேன். ஆனால் நேற்று அவர் தளத்தில் படித்த கவிதை வெகுவாய் கவர்ந்தது. இலக்குவண், நல்ல வேலை(ளை)யாக அதை கூகுள் டாக் ஸ்டேடஸ் மெசேஜில் போட்டிருந்தாய்.


வழி தவறிய மீன்கள்

வழி தவறிய
மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்

இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை

முழுவதும் படிக்க இலக்குவண் வலைப்பூவிற்கு
செல்க


***

ஒரு நாள் வானவில் வீதி கார்த்திக்கும் நானும் காதல் கவிதைகளை பற்றி பேசிக்கிட்டு இருந்தோம். பெரும்பாலும் எல்லோருமே காதலை மிகைப்படுத்திதான் எழுதுறாங்கன்னு சொன்னான். சரி நீ தான் ஒரு காதல் கவிதை எழுதுறதுன்னு சொன்னதற்கு கவிதைக்கும் எனக்கும் இப்போதைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னான். சரி ஒரு கதை எழுது என்று சொல்லிகிட்டு இருந்தேன். தம்பி இப்போ அட்டகாசமா ஒரு கதை எழுதியிருக்கான், “தனிமையின் விலை”. எத்தனை இளமை, எத்தனை துள்ளல் ?!

அவன் எழுத்துகளை ஏகப்பட்ட மக்கள் படிக்கிறார்கள் என்பதாலும், அவன் எழுத்துக்கு அனேகம் ரசிகர்கள் (அதாவது ரசிகைகள்) இருக்கிறார்கள் என்பதாலும், இது ஒரு விளம்பரம் அல்ல என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். வேறென்ன ஒரு பொறாமை தான் :-)

கார்த்திக், சத்தியமா சொல்றேன். உன்னோட எழுத்துக்களை பார்த்து பொறாமையா இருக்கு. You make me feel old dude ;-)

9 April 2009

கோவில் யானை




கோவிலில்
எப்போதும் பார்க்க முடிகிறது
அந்த யானையை

காசு தந்தால் பாகனுக்கு
தின்பண்டங்கள் அதற்கு
எதுவாயினும் பதிலுக்கு ஆசீர்வதிக்க
தவறியதில்லை

கழுத்து மணியை ஆட்டி
தனக்கான இசையை பிறக்கச்செய்கிறது
பிறருக்கு கேட்காத எதோவொரு தாளத்திற்கு
பெருத்த உடலை அசைத்துக் கொள்கிறது

தொலைதொடர்புகளற்ற அதன் உலகில்
காட்டுலா குறித்த ஏக்கங்களோ
பிச்சையெடுக்கும் தன்னிலை குறித்த
கவலைகளோ
இல்லாதிருக்கலாம்

முதன்முதலாய் இன்னொரு யானையை
முகாமில் சந்திக்கும் வேளை
என்ன சொல்ல எத்தனிக்கும்
கோவில் யானை?

நன்றி : நவீன விருட்சம்

7 April 2009

மீண்டெழுதல்



எனக்கான பாதையை தேர்வு
செய்துகொண்டேன்
வாகனத்தை சோதனையிட்டதில்
பழுதேதுமில்லை
தலைக்கவசத்தை பொருத்தியபடியே
சாலைவிதிகளை ஒருமுறை நினைவுகூர்ந்தாயிற்று
பயணமும் இனிதாக தான் இருந்தது
எதிரே வந்தவன் பிசகி
என்மீது மோதும் வரை;
உன் பார்வையில் தடுமாறி மீண்டெழுந்ததைவிட
இம்முறை சீக்கிரமே
இயல்புக்கு திரும்பிவிட்டேன்

நன்றி : யூத்ஃபுல் விகடன்

4 April 2009

காதல் சாலை



வாரம் சீக்கிரமாக ஓடி வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. புதுவைக்கு கிளம்ப வேண்டும். நாவலூரில் வேலை செய்வதால் கோயம்பேடு பேருந்து நிலையம் போக தேவையில்லை. அங்கு போகும் நேரத்திற்கு புதுவைக்கே போய்விடலாம். இங்கிருந்து கோவளம் போய்விட்டால் எப்படியும் ஒரு பேருந்தை பிடித்துவிடலாம். ஒவ்வொரு வாரமும் இப்படி பயணம் செய்வது சில சமயம் அலுப்பை தருகிறது. ஆனாலும் என்ன செய்வது? நீயல்லாத சென்னையில் வாரயிறுதிகளை கழிப்பதில் சுத்தமாக எனக்கு விருப்பமில்லை

அதோ, புதுவை போக்குவரத்து கழகப் பேருந்து வந்துவிட்டது. வழக்கம் போல பேருந்து நிரம்பியிருக்கிறது. மறுயோசனையின்றி படிக்கட்டில் அமர்ந்துவிட்டேன். படிக்கட்டில பயணம் செய்வது ஆபத்தானது. தூங்க முடியாத சிக்கலும் இருக்கிறது. இருப்பினும் ஏனோ அது மிகவும் பிடித்திருக்கிறது. அணு அணுவாய் சாவதாய் முடிவெடுத்தப்பின் காதல் சரியான வழி தான் என்று சொல்கிறார்கள். ஆனாலும் காதலுக்காக எதையும் செய்ய துணிபவர்கள் தான் அதிகம்.

ரொம்ப நேரம் காலை மடக்கி உட்கார்ந்திருக்கவும் முடியவில்லை. உள்ளம் சொல்வதையெல்லாம் உடம்பு கேட்க மறுக்க ஆரம்பித்திவிட்டது. உடற்பயிற்சி செய்தால் தானே? கல்லூரியில் சேர்ந்ததும் தான் உடற்பயிற்சி செய்யவே ஆரம்பித்தேன். காதலின் கரங்களில் சேர்ந்ததும் அதை விட்டாயிற்று. காதலி கிடைக்கும் வரை தான் உடல் அழகாக இருக்கவேண்டும். காதலி கிடைத்ததும் உள்ளம் அழகாக இருந்தாலே போதும். அப்படித்தானே முகில் என்று அப்போது கேட்டு சிரித்தார் மாமா. அப்போது உடலை பற்றி கவலைப்படாத உள்ளம் இப்போது அதை நொந்து என்ன பயன்?

இரண்டரை மணி நேரப் பயணம் தான், எனினும் பேச்சுத்துணை இல்லாமலோ அல்லது தூங்காமலோ பயணம் செய்வது எனக்கு விருப்பமில்லாது ஒன்று. உனக்கு பிறகு பேச்சுத்துணையாக யாரும் தேவைப்படவில்லை. அல்லது மனம் ஒப்பவில்லை. இப்போது தான் நினைவுக்கு வந்தது. இசைப்பேழையில் இருக்கும் பாட்டுகளை கேட்கலாம். எல்லாம் எனக்கு மிக மிக விருப்பமானவை. ரகுமான் இசையமைத்த பாடல்கள்.

இல்லை. அவை என் விருப்பப் பாடல்கள் மட்டுமன்று. நமக்கு மிகவும் பிடித்தமானவை. ஒவ்வொரு பாடலிலும் உன் நினைவும் சேர்ந்திருக்கும். ஒவ்வொரு பாடலை பற்றியும் எவ்வளவு பேசியிருப்போம். எத்தனை முறை அந்த இசையுடன் பயணித்திருப்போம். வேண்டாம், இப்போது கல்யாணியில் அமைந்த பாடல் கூட எனக்கு முகாரியாக கேட்கும்.

மகாபலிபுரத்தை தாண்டியாயிற்று. இன்னும் ஒன்றரை மணி நேரம்தான். கிழக்கு கடற்கரை சாலையின் அழகை மீறி ஏதோவொரு சலிப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. சாலையின் ஓரத்தில் இருக்கும் மஞ்சள் கோட்டை இப்போது தான் கவனித்தேன். பேருந்தின் வேகத்திற்கேற்ப அதுவும் மூச்சிரைக்க ஓடிவருவது போல் தோன்றுகிறது. பேருந்து நகர நகர அந்த மஞ்சள் கோடு பேருந்து சக்கரங்களோடு ஒட்டுவதும் விலகுவதுமாய் இருந்தது. ஒவ்வொரு முறை விலகும்போது மீண்டும் அதே வேகத்தில் வந்து ஒட்டிக்கொள்கிறது. பல சமயங்களில் சக்கரங்களோடு ஒன்றிணைந்து கண்ணுக்கு புலப்படாமல் போய்விடுகிறது. நம் காதல் காலங்களின் ஊடல் பொழுதுகளையும் அதன்பின்னேயான கூடல் கணங்களையும் நினைத்து கொள்கிறேன்.

காதல் கணங்கள் மட்டுமில்லை, அதன் நினைவுகளோடு உறவாடும் தருணங்களும் கூட காலத்தை மறக்கடிக்க செய்யும் சக்திபடைத்தவை போலும். பேருந்து மதுராந்தகம் தாண்டி புதுவைக்குள் நுழைந்துக்கொண்டிருப்பதை நான் உணரவேயில்லை. முத்தியால்பேட்டையில் இறங்க வேண்டியவர்கள் எல்லாம் தயாராக இருக்கும்படி நடத்துனர் சொல்லும் போது இயல்புக்கு திரும்பினேன்.

பையை தேடியெடுத்து முத்தியால்பேட்டை சந்திப்பில் இறங்கியபோது தான் நினைவுக்கு வந்தது. பேருந்தோடு பயணித்துக்கொண்டிருந்த மஞ்சள் கோட்டை காணவில்லை. எந்த இடத்தோடு நின்றுபோனதென தெரியவில்லை. அதிகாலை பனி கொட்டும் மார்கழி மாதத்திலொரு நாள் திடீரென்று நீ காற்றோடு கலந்து போனதை நினைத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை!

அணு அணுவாய் சாவதாய் முடிவெடுத்தப்பின் காதல் சரியான வழி தான் - பாவலர் அறிவுமதி
படம் உபயம் : கூகுள்

31 March 2009

இனி ஜிமெயிலில் தமிழிலேயே மடல் எழுதுலாம் :)

முன்னர் ஜிமெயில் தமிழில் இடைமுகம் அளித்தது. இப்போது தமிழிலேயே மடலும் அனுப்பலாம்.

உங்கள் ஜிமெயில் பக்கத்தில், SETTINGS ஐ அழுத்தவும். General பகுதியில் Languague என்ற பத்தியில் Enable Transliteration ஐ தேர்வு செய்து உங்கள் தேர்வு மொழியாக ’தமிழ்’ மொழியை தேர்தெடுங்கள்

இனி தமிழிலேயே எல்லோருக்கும் எளிதாக மடல் அனுப்பலாம். மற்ற தட்டச்சு நிரலிகளை விட கூகுள் நிரலி செயல்படாது எனினும், அவை இல்லாத நேரங்களில் மற்றும் அவற்றை தேட முடியாத சூழலில் ஜிமெயிலில் இருந்தே தமிழில் மடல் அனுப்புவது எளிதாக இருக்கும்

செய்தியை அறிய தந்த நண்பர் சுப்ரமணியத்திற்கு நன்றி :)

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு - பாவேந்தர் பாரதிதாசன்

25 March 2009

யாதும் ஊரே, யாவரும் கேளிர் !

யாதும் ஊரே
பிரேம்குமார் சண்முகமணி





மும்பையெங்கும் இந்தி பேசுபவர்களை
முரட்டுத்தனமாய் தாக்குங்கள்;
பூனே நகரத்துள்
கன்னடப் படம் ஓடும்
கொட்டகை கொளுத்தப்படட்டும்;

பெங்களூரில் வாழும்
தமிழர்கள் எல்லாம் பாவிகள்தாம்!
பலியிடுங்கள் அவர்களை.

பள்ளிகளில் மட்டும் பிள்ளைகள்
பாடிக்கொண்டிருக்கட்டும்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்'

நன்றி : கீற்று

18 March 2009

இத்த‌னை நாளாய் எங்கிருந்தாய்

சோம்ப‌லுட‌ன் விடிந்த‌ ம‌ற்றொரு ஞாயிறு காலையில் முகில‌னின் தொலைபேசி ஒலித்த‌து. எதிர்முனையில் அவ‌ன் காத‌லி க‌னிமொழி.

முகில், மாலை வீட்டுக்கு வரீயா?

நான் மாட்டேன்பா, உங்க வீட்டில ஒரே பெண்கள் கூட்டமா இருக்கும். எனக்கு ஒரு மாதிரி இருக்கும். நான் வரல‌

அட, யாரும் இல்ல. எல்லோரும் கடைத்தெருவுக்கு போறாங்க. தனியா இருக்க கடுப்பா இருக்கும். அதான் உன்னை கூப்பிட்டேன்

என்னது தனியா இருக்கீயா? இதோ, உடனே கிளம்பி வரேன்

தோடா, ரொம்ப ஆசையெல்லாம் வளத்துக்காதே. சும்மா பேசிக்கிட்டு இருக்கத்தான் கூப்பிட்டேன். சீக்கிரம் வந்து சேரு

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

என்னப்பா கிளம்பிட்டீயா இல்லையா?

இப்போ தான் கனி கிளம்பினேன். இன்னும் ஒரு பத்து நிமிசம் ஆகும் வர‌

வரும் போது ஒரு நாற்காலி வாங்கிட்டு வாயேன்.

எதுக்கு ? உன் தோழிகள் வர வரைக்கும் அது உங்க வீட்டு வாசல்ல போட்டு நான் உக்காந்து உனக்கு காவல் காக்கவா?

ரொம்பத்தான்... வாங்கிட்டு வா. சொல்றேன்

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

யேய் கனி, இந்த கீபோர்டு எப்போ வாங்கினே?

நேத்து அண்ணா வந்த போது வாங்கினேன். எனக்காக என் சம்பளத்தில் நான் விரும்பி வாங்கிகிட்டது.

நான் இப்போ தான் வேலைக்கு சேர்ந்து இருக்கேன். நீ கொஞ்சம் நாள் பொறுத்திருந்தா நானே உனக்கு இத வாங்கி கொடுக்கனும்னு இருந்தேன்.

அதுக்கென்ன? இது பேசிக் மாடல் தான். இன்னுமொரு நல்ல மாடல் இருக்கு. விலை 2 லட்சம் தான். நீ சம்பாதிச்சு அதை எனக்கு வாங்கி கொடு

ஆகா, நீ ஆதாரத்துக்கே சேதாரம் விளைவிச்சுருவ போல. சரி சரி, உனக்கு பிடிச்ச பாட்டு ஒன்னு வாசிச்சு காட்டேன்.

வாசிக்கிறேன். ஆனா நீ கூட‌வே பாட‌னும். ச‌ரியா?

உன‌க்கு ஏன் இந்த விப‌ரீத‌ ஆசை? ச‌ரி விடு. நான் பாடுற‌த‌ வேற‌ யாரு கேக்க‌ போறா? பாடுறேன்...

முதல்ல அந்த நாற்காலிய கொடு. நான் உட்காருறேன்

தோடா...இவ்வ‌ள‌வு தூர‌ம் சும‌ந்துகிட்டு வ‌ந்திருக்கேன். நான் தான் முத‌ல்ல‌ உக்காருவேன். நீ வேனும்னா என் ம‌டியில‌ உக்காந்துக்கோ

ஆள‌ விடு சாமி. நீயே அந்த‌ நாற்காலியில உட்காரு


வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்
இரவை திறந்தால் பகல் இருக்கும்
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்


எங்க‌ உன் இமையை திற‌ பார்ப்போம்... நானிருக்கேனான்னு?


விழிக‌ள் நான்கும் நெருங்க‌, இமைக‌ள் எல்லாம் ப‌ட‌ப‌ட‌த்துக்கொண்ட‌ன. இரு க‌ண்க‌ள் கிற‌க்க‌த்தில் க‌விழ்ந்து கொண்ட‌ன. இரு க‌ண்க‌ள் க‌ல‌க்க‌த்தில் துடித்த‌ன.

ச‌ரி க‌னி, நான் கிள‌ம்புறேன்

ம்ம்ம்

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

முகில் கிள‌ம்பி இர‌ண்டே நிமிட‌த்தில் அவ‌ன் செல்பேசி குறுகுறுத்த‌து. க‌னி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தாள்


எதுக்கு திடீர்னு கிள‌ம்பி போனே?

இல்ல‌, உன்னை முத்த‌மிட்டுடுவேனோன்னு தோனுச்சு. அதான் கிள‌ம்பிட்டேன்

ஏன்? கொடுத்தா தான் என்ன‌வாம்?

நீதானே ரொம்ப‌ ஆசையெல்லாம் வ‌ள‌த்துக்க‌ கூடாதுன்னு சொன்ன‌....

அட‌ப்பாவீ.. அதெல்லாம் சொல்ற‌து தான். இன்னும் இர‌ண்டு மாச‌த்துல ந‌ம‌க்கு க‌ல்யாண‌ம். உன்னை க‌ட்டிக்கிட்டு என்ன‌ தான் செய்வேனோ?

YOU ARE SUCH AN UNROMANTIC PERSON MUGHIL...


10 March 2009

சந்தனமுல்லைக்கு போட்டியாக‌

சில பழைய தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் வீடியோக்களை நண்பர்களின் ஆர்குட் வீடியோக்களில் பார்க்க நேர்ந்தது. பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் சிலர் அதே போல உணரலாம். ஆக அந்த வீடியோக்கள் உங்களுக்காக‌

நீளமான பாடல். அப்போது திரையுலகில் பிரபலமாய் இருந்து பலரை ஒன்றாக காணக்கூடிய வாய்ப்பை தரும். இந்தியாவின் அனேக மொழிகளில் வரிகளை கொண்டிருக்கும். அடிக்கடி டி.டி யில் ஒளிபரப்படும்



உள்நாட்டு அமைதி சற்று ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் இந்நாட்களில் தொலைகாட்சிகள் இப்பாடலை ஒளிபரப்பினால் தேவலை

இசைந்தால் நம் இருவரின் ஸ்வரமும் நமதாகும்
திசை வேறானாலும் ஆழிசேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவது போல்...


***


அடுத்த வீடியோ The Jungle Book தொடரின் முகப்புப் பாடல். கேட்க கேட்க திகட்டாத பாடல். இப்பாடலை கேட்கும் போது மீண்டும் பால்யத்திற்கே போய் விட்டால் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது.



***


சந்தனமுல்லை அடிக்கடி நாஸ்டால்ஜிக் பதிவுகள் போட்டு பழைய நினைவுகளை கிண்டி விடுவாங்க. இந்த பதிவ எழுத ஆரம்பிச்சவுடனே அவுங்க பதிவுகள் தான் நினைவுக்கு வந்துச்சு. அதான் அப்படி ஒரு தலைப்பு

***


இலவச இணைப்பு : தீபாவளிக்காக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் செய்த வீடியோ. பார்த்து ரசிங்க!

24 February 2009

அது காதல் காலம்

'சின்ன சின்ன ஆசை' அப்போது அத்தனை பிரபலம். பாடலின் வரிகள் மனப்பாடமாய் தெரியும். பாடங்களில் எப்போதும் அந்த நினைவாற்றல் உதவிதாய் நினைவேயில்லை. பள்ளியில், விழாக்களில், குடும்ப நிகழ்ச்சிகளில் குழந்தைகளை பாடச் சொன்னால் அவர்கள் முதல் தேர்வு 'சின்ன சின்ன ஆசை' பாடல் தான்.

மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை

புதிய முகம் பாடல்களில் அத்தனை இனிமை அமைதியும் கலந்திருக்கும். இரவின் அமைதியில் காதோரம் அவை ஒலிக்கும் போது அன்றைய பொழுதின் அத்தனை அலுப்பும் மறைந்து உறக்கத்தை நோக்கிய இனிமையான பயணம் ஆரம்பமாகும்

நேற்று இல்லாத மாற்றம் என்னது?
காற்று என் காதில் ஏதோ சொன்னது...

திருடா திருடா வரும் போது ரகுமானின் இசைக்கு பெரிய விசிறியாகிருந்தேன். எப்போதும் டேப் ரிகார்டரில் ரகுமான் பாடல்கள் தான் ஒலித்துக்கொண்டிருக்கும்

பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் போக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம் - சுகம்
ஏந்தி ஏந்தி இங்க வர வேண்டும்


என்னவளே அடி என்னவளே என்று உன்னிகிருஷ்னன் உருகியபோது நானும் கொஞ்சம் உருகிக்கொள்வேன். மனதிற்குள் வருங்கால காதலிக்காக சமர்ப்பனம் செய்து கொள்வேன்.

காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிசமும் வருசமடி
கண்கள் எல்லாம் பார்ப்பது போல் ஒரு கலக்கமும் தோன்றுதடி
இத சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி


காதலிக்கும் நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை. இருப்பினும் ரகுமானின் காதல் பாடல்கள் அத்தனை பிரியத்திற்கு உரியதாய் இருந்தன. பதின்மத்தின் தொடக்கத்தில் இருந்ததால் காதல் பாடல்கள் மேல் ஒரு தனி ஈர்ப்பு இருந்திருக்கலாம். 'உயிரே உயிரே' என்று அர்விந்த்சுவாமி உருகும் போது இல்லாத காதலிக்காக நானும் உருகியிருக்கிறேன். இது அனேகமாக காதல் செய்த காயமில்லை... இசை செய்த மாயம் தான்

என்னுயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன்மீது பழிபாடும் பெண்ணே
அதற்காக்த்தான் வாடினேன்


கிட்டத்தட்ட நண்பர்கள் வட்டத்தில் எல்லோருமே ரகுமான் இசையில் மயங்கியவர்களாகவே இருந்தனர். அடுத்து அவர் எந்தப் படத்திற்கு இசைமைக்கப் போகிறார், எந்த ஒலிநாடா எப்போது வெளிவரும் என்று எல்லா தகவல்களையும் சேகரித்து வைத்திருப்போம். ஒலிநாடா வந்ததும் யார் முதலில் வாங்குவது என்று போட்டி வேறு நடக்கும்

ஒரு புறம் ரகுமான் தமிழில் இசையமைப்பது குறைந்த போனது, இன்னொரு புறம் இசையோடு நான் செலவிட்ட நேரம் குறைந்தது. ஆனாலும் அவர் இசைக்கு இன்னும் நான் ரசிகனாகவே இருக்கிறேன். என் பதின் வயது நினைவுகளில் அவர் இசை நிறையவே ஆக்ரமிப்பு செய்திருப்பதால், என்றுமே அந்த இசைக்கு என் மனதில் ஒரு தனியிடம் இருக்கும் :)

Slumdog Millionaire படம் குறித்து எனக்கு நிறைய அதிருப்தி இருக்கிறது. அதே போல், ஒரு தமிழ் படத்திற்காக இந்த விருதை வாங்கவில்லையே என்ற வருத்தமும் இருக்கிறது. ஆனால் அவர் வாங்கி வந்த இரண்டு ஆஸ்கார்கள் முன் இதெல்லாம் தூசு.

முக்கியமாக ஆஸ்கார் மேடையில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று மறக்காமல் தமிழில் கூறியது மிகவும் மகிழ்ச்சி.

இன்னும் நிறைய விருதுகளை வாங்க என்னைப் போல பல்லாயிரம் ரசிகர்களின் வாழ்த்து எப்போதும் உங்களுடன் இருக்கும்.

"எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. நீ நதி போல ஓடிக்கொண்டிரு"

23 February 2009

எல்லா புகழும் அவனுக்கே - வாழ்த்துகள் ரகுமான்

மிகவும் எதிர்ப்பார்த்த ஆஸ்கார் விருதுகளை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் இல்லாமல் இம்முறை இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அதிகமாய் ஆஸ்கரை எதிர்ப்பார்த்திருப்பார்கள். ஏனென்றால் ரகுமான் ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

இதோ, முடிவுகளும் வந்தாயிற்று

Best Achievement in Music Written for Motion Pictures, Original Score
Winner: Slumdog Millionaire (2008) - A.R. Rahman

Best Achievement in Music Written for Motion Pictures, Original Song
Winner: Slumdog Millionaire (2008) - A.R. Rahman, Sampooran Singh Gulzar("Jai Ho")

ஒன்றில்லை, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கி குவித்துவிட்டார் ரகுமான்.

மறக்காமல் ஆஸ்கார் மேடையில் அவர் சொன்னது 'எல்லாப் புகழும் இறைவனுக்கே'

மிகவும் பெருமையாயிருக்கிறது ரகுமான். வாழ்த்துகள் :)

17 February 2009

வழக்கொழிந்த சொற்கள்

//மேவி என்னை ஒரு தொடர்பதிவுக்கு ரொம்ப நாள் முன்னாடி கூப்பிட்டிருந்தார். இப்போதான் டைம் கிடைத்தது. //



இதை அப்படியே வழிமொழியலாம். கார்த்திக் இந்தப் பதிவை எழுதச்சொல்லி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இப்போது தான் எழுத ஆரம்பிக்கிறேன்.



வழக்கொழிந்த சொற்களின் பட்டியலை எழுத ஆரம்பித்தால் அது நீண்டு கொண்டே தான் போகும். மிக இயல்பாக பயன்படுத்தும் பல வார்த்தைகள் இன்று வழக்கொழிந்து போய்விட்டன. நிறைய சொற்களில் உருமாறிவிட்டன, அல்லது அவற்றுக்கு நிகரான வேற்று மொழி சொற்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.



ஆனால் என்னைப் பொறுத்த வரையில் உண்மையாகவே வழக்கொழிந்துவிட்ட வார்த்தைகள் எவை தெரியுமா? (தொடரை ஆரம்பித்த உள்ளம் என்னை மன்னிக்கட்டும் ;-))



அமைதி - அனேக நாடுகளில் மன்னராட்சி முடிந்து மக்களாட்சி தொடங்கியாயிற்று. ஆனால் இன்னும் போர், போராட்டங்கள் போன்றவை முடிந்தபாடில்லை



சகிப்புதன்மை - இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கூட அடுத்த தலைமுறையினருக்கு தெரியாமல் போய்விடலாம். குடும்பங்களில் தொடங்கி பொதுயிடங்கள் வரை எங்கேயும் யாருக்கும் சகிப்புதன்மை எட்டிப்பார்ப்பதாய் தோன்றவில்லை. தேவையில்லாத பலவற்றை சகித்துக்கொள்கிறோம் அல்லது கண்டும் காணாமலும் விட்டுவிடுகிறோம் :(



இளைய தலைமுறையினர் யாராவது தோல்வியை சகித்து கொள்வார்களா?? கிடையாது. ஆயிரம் பேர் பங்கு கொள்ளும் போட்டியில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று தெரிந்தாலும், அவர்களால் தோல்வியை மட்டும் சகித்துக்கொள்ளவே முடியாது.



விட்டுக்கொடுத்தல் - அப்படின்னா என்று கேட்கிறீர்ளா? எல்லோருக்கும் எல்லாமும் தமக்கே கிடைக்க வேண்டும் என்ற எண்ணம். ஒரு சின்ன விசயத்தை கூட விட்டுக்கொடுக்க முடியாத மனம். அப்படி விட்டுக்கொடுத்தால் கூட சொல்லிக்காட்டும் சுபாவம்.



இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.



அதே போல் வழக்கொழிய வேண்டிய வார்த்தைகளும் நிறைய இருக்கின்றன. போர், ஏய்ப்பு, சூழ்ச்சி, வறுமை....... இன்னும் எத்தனையோ

இந்த தொடர் விளையாட்டுக்கு அழைக்க விரும்பும் இருவர் :
ராம் CM
கார்த்திகைப் பாண்டியன்

23 January 2009

அன்புள்ள அப்பாவுக்கு

தன் மகளின் அறையை கடந்தபோது ஏதோ ஒரு வித்தியாசம் தெரிய, சட்டென நின்றார் அருள். உற்று நோக்கிய போது, எப்போதும் இல்லாமல் அறை மிக சுத்தமாக இருந்தது. எல்லாப் பொருட்களும் அதனதன் இடங்களில் இருந்தன. ஏதோ நெருட அறைக்குள் சென்ற அருளின் கண்களில் தலையணை மீது இருந்த கடிதம் தென்பட்டது. 'அன்புள்ள அப்பாவுக்கு' என்று அதில் எழுதியிருந்தது. சற்றும் தாமதிக்காமல் கடிதத்தை பிரித்து படிக்கலானார்

அன்புள்ள அப்பா,
இதை மிகுந்த வேதனையுடன் எழுதுகிறேன். உங்களை பிரிவதில் எனக்கு நிறைய வருத்தம் இருக்கிறது, ஆனால் வேறு வழியில்லை. நான் வீட்டை விட்டு போகிறேன். உங்களிடம் சொல்லிவிட்டு கிளம்பியிருக்கலாம், ஆனால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று தெரியவில்லை. ஆமாம்பா, நான் என் காதலன் வெற்றிசெல்வனுடன் இந்த ஊரை விட்டு போகிறேன்.

வெற்றியை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவரும் என்னை மிகவும் காதலிக்கிறார். சந்திக்கும் போது உங்அளுக்கும் அவரைப் பிடிக்கும். கைலி கட்டிக்கொண்டு, அழுக்குச்சட்டையுடனும் முரட்டு தாடியுடனும் அவர் காட்சியளித்தாலும் மிகவும் பாசமானவர். அது மட்டும் இப்போ காரணமில்லை அப்பா, நான் இப்போது கருவுற்று இருக்கிறேன். வெற்றிக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகளும், நான்கு குழந்தைகளும் இருந்தாலும், இந்த குழந்தையையும் கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். ஐம்பது வயதில் தன்னால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதில் பெருமிதம் அவருக்கு.

வெற்றி ஒரு காட்டில் தான் வாழ்கிறார். அதிகம் பணம் இல்லையென்றாலும் கஞ்சா வளர்த்து நிறைய செல்வம் சேர்க்கலாம் என்று அவர் உறுதியாக நம்புகிறார். எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும், சீக்கிரமே எய்ட்ஸீக்கு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டால் அதை வெற்றிக்காக வாங்கவும் அந்த பணத்தை நாங்கள் பயன்படுத்திகொள்வோம்.

எனக்கு 16 வயதாகிறது அப்பா. என்னால் எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. கவலைக்கொள்ள வேண்டாம். சீக்கிரமே உங்கள் பேரக்குழந்தைகளுடன் உங்களை காண வருவேன்.

உங்கள் அன்பு மகள்,
இளவேனில்


படப்படப்புடன் படித்துக்கொண்டிருந்த கடிதத்தில் 'திருப்புக' என்று எழுதியிருந்ததையும் கவனித்தார் அருள். புரட்டிப்பார்த்த போது அதில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது

அப்பா,
நீங்கள் படித்தவற்றில் எதுவும் உண்மையில்லை. நான் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன். வாழ்க்கையில் எத்தனையோ மோசமான விசயங்கள் நடக்கலாம் என்று உங்களுக்கு நினைவுகூறவே அந்தக்கடிதத்தை எழுதினேன். அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் மேசை மீதிருக்கும் என் தேர்வு அறிக்கை எவ்வளவோ மேல் என்று தோன்றலாம். அதை பார்த்துவிட்டு, கையொப்பம் இடலாம் என்று தோன்றினால் என்னை அழைக்கவும். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அப்பா

19 January 2009

புத்தகக் கண்காட்சி - 2009

2007ம் ஆண்டு தான் முதன் முதலில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். முன்பே புதுவையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருக்கிறேன் என்ற போதும், வாசிப்பில் கொஞ்சம் ஈடுபாடு வந்தவுடன் சென்றதால் 2007 புத்தகக் கண்காட்சியை என்னால் மறக்கவே முடியாது.

ப்ரியன் தான் என்னை முதன் முதலில் அங்கே கூட்டிச்சென்றார். நான் விரும்பிய தலைப்புகளில் நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகப்படித்தினார். நிறைய நூல்களை வாங்க ஆலோசனைகள் கூறினார். அடுத்தடுத்து போன ஒவ்வொரு முறையும் அவருடன் தான் சென்றிருக்கிறேன், அல்லது அவரை அங்கு சந்தித்திருக்கிறேன்.


இம்முறையும் புத்தகக் கண்காட்சி தொடங்கியதும் நண்பர்கள் எல்லோருக்கும் கண்காட்சியில் சந்திக்கலாம் என்று குறுந்தகவல் அனுப்பியாயிற்று. சிலர் வர முடியாமல் போக, நான், 'வானவில் வீதி' கார்த்திக், த.அகிலன், எழில்பாரதி மற்றும் ப்ரியன் 11ம் தேதி கண்காட்சியில் சந்திப்பதாய் முடிவு செய்தோம்.

கார்த்திக்கிற்கு இந்த அனுபவம் புதிதாக இருந்தது. கிட்டதட்ட நான் 2007ல் இருந்த மனநிலையில் தான் இருந்தான். கண்காட்சி குறித்த அவன் பதிவிலேயே அது தெரிகிறது. கூட்டி சென்றது நான் எனினும், புத்தகங்கள் குறித்தும் வாசிப்பு குறித்தும் அகிலன் தான் அவனுக்கு நிறைய சொல்லிக்கொண்டிருந்தார்.

மதிய உணவு படு மோசமாக இருந்தது. ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பகம் மட்டுமே உணவை வழங்கிக்கொண்டிருந்ததால் அவர்கள் நோக்கத்திற்கு விலையை நிர்ணயித்திருந்தார்கள். அடுத்த முறை நிர்வாகிகள் இதை கொஞ்சம் கண்டு கொண்டால் நன்று

நிறைய கூட்டம் இருந்ததும், நிறைய பேர் இன்னும் வாசிக்கிறார்கள் என்று நினைக்கிற போதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பலரும் ஆன்மீகப் புத்தகங்கள், சமையல் கலை, பணம் சம்பாதிப்பது எப்படி போன்ற நூல்களைத்தான் வாங்கிகிறார்கள்

இம்முறை குழந்தைகளுக்கான நூல்கள் விற்கும் அரங்கள் நிறையவே தென்பட்டது நிறைவாய் இருந்தது. ஆனால் பலவும் ஆங்கிலத்திலேயே இருந்தது. தமிழில் குழந்தைகளுக்கான நூல்கள் அதிகம் இல்லையா?

நேற்று மீண்டுமொரு முறை கண்காட்சிக்கு சென்று வந்தோம். புத்தகக் கண்காட்சிக்கு செல்வது எத்தனை முறை நடந்தாலும் அலுப்புத்தராத ஒரு அனுபவமாகவே இருக்கிறது. இம்முறை நிறைய நூல்களை வாங்கவில்லை. வாங்கியவையின் பட்டியல்


1. நான் வித்யா - லிவிங்ஸ்மைல் வித்யா


கொஞ்சம் தாமதமாகத்தான் வாங்கியிருக்கிறேன். அவர் வாழ்வில் கண்ட வலிகளையெல்லாம் படிக்கையில் நம்மையும் உணரச் செய்திருக்கிறார்


2. ஆயிஷா - இரா. நடராசன்


நமது கல்வி முறையை கோளாறுகளை அழகாய் எடுத்துரைக்கும் ஒரு குறுநாவல். விலை ரூ. ஐந்து தான். கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று


3. நொண்டிக்காவடி - யுகபாரதி


நேர்நிரையின் கவிதை நூல்களின் அழகே தனி தான். கைக்கு அடக்கமான அதன் வடிவமும், அழகான அட்டையும், உறுத்தாத எழுத்துருக்களும், அந்த நூல்களை வைத்திருப்பதும் படிப்பதுமே ஒரு அலாதியான சுகம் தான்.

'நொண்டிக்காவடி' யுகபாரதியின் சமூகக் கவிதைகளின் தொகுப்பு.


4. தனிமையின் நிழல் குடை - த. அகிலன்


இணையம் மூலம் அறிமுகமான நண்பர் அகிலனின் கவிதை நூலை இப்போது தான் வாங்க நேர்ந்தது. எழுதிய கவிஞரோடு சேர்ந்து போய் அந்த நூலை வாங்கியதிலும் ஒரு தனி மகிழ்ச்சி இருந்தது.

1 January 2009

புத்தாண்டு நினைவலைகள்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

வீட்டிற்குள்ளேயே அமர்ந்து கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியில் புத்தாண்டு கொண்டாட்டங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது எப்படியெல்லாம் புத்தாண்டை கொண்டாடியிருக்கிறேன் என்று எனக்குள்ளேயே அசைப்போட்டு கொண்டேன்.

பள்ளிப்படிப்பு முடியும் வரை தொலைக்காட்சியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை பார்த்துக்கொண்டிருப்போம். பனிரெண்டு மணி அடித்தவுடன் வீட்டில் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லிவிட்டு உறங்கிவிடுவோம்.

கல்லூரிக்குள் நுழைந்ததும் புத்தாயிரம் ஆண்டு பிறக்க ஆயத்தமானது. செப்டம்பரிலேயே நண்பன் ஒருவன் ஒரு ஆலோசனை சொன்னான். சரியாக 1999 செப்டம்பர் 23ம் தேதியில் இருந்து அந்த திட்டத்தை செயல்படுத்தினோம். ஆம், கிடைக்கும் காசிலிருந்து தினம் 50 பைசாவை சேமிக்கத் தொடங்கினோம். சரியாக நூறு நாட்களில், டிசம்பர் 31ம் தேதி கையில் 50 ரூபாய் இருக்கும், அதை வைத்து புத்தாண்டை கோகாகலமாகக் கொண்டாடலாம் என்று திட்டம்.

ஐம்பது ரூபாயில் என்ன கோகாகலம் என்று கேட்கிறீர்களா? மாலை 7 மணி வாக்கில் கடற்கரைக்கு கிளம்பியிருப்போம் என்று நினைக்கிறேன். புத்தாயிரம் ஆண்டு என்பதால் புதுவை கடற்கரை வீதியில் அரசு சார்பில் ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு நடன நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடந்துக்கொண்டிருந்தன. அவ்வப்போது கொஞ்சம் கலை விருந்து, பசிக்க ஆரம்பித்ததும் கொஞ்சம் பானிபூரி, மசாலா பூரி. அடுத்து சுற்றில் கோன் ஐஸ்க்ரீம் என ஐம்பது ரூபாய் தீருமட்டும் நன்றாக உண்டு களித்தோம். காணும் நண்பர்களை எல்லாம் வாழ்த்திவிட்டு, சரியாக பனிரெண்டு மணிக்கு நண்பர்களிடமிருந்து விடைபெற்று வீடு சேர்ந்தோம். மறக்க முடியாது ஒரு அற்புதமான புத்தாண்டு கொண்டாட்டம் அது

அடுத்து சில ஆண்டுகளில் எங்கள் பட்ஜெட் கொஞ்சம் உயர்ந்தது. ஒரு பிரபல உணவகம் புத்தாண்டுக்காக நூறு ரூபாய்க்கு இசையுடன் கூடிய அளவில்லா விருந்து அளித்துக்கொண்டிருந்தது. அப்படி அருமையான பாடல்களோடும் நல்ல உணவோடும் புத்தாண்டிற்கு முந்தைய சில இரவுகள் கடந்திருக்கின்றன.

பட்டமேற்படிப்பு எல்லாம் முடித்து 2004 வருடம் அனைவருக்கும் வேலைக்கு சென்றுவிட்டோம். 2005ஐ வரவேற்க ஆவலாய் காத்திருந்தோம். ஒரு மாதத்திற்கு முன்பே அலுவலகத்தில் விடுப்பு கூட சொல்லியாயிற்று. ஆனால் 2004 ஆண்டின் பெருந்துயராக ஆழிப்பேரலையின் ஆட்டத்தால் தமிழகமே சோகத்தில் மூழ்கியது. அந்த புத்தாண்டை யாருமே அனேகமாய் கொண்டாடியிருக்க மாட்டார்கள். அதற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் படியாக எந்த புத்தாண்டு கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை.

சென்ற வருடம் ஒரு முக்கிய அலுவல் காரணமாக புத்தாண்டை மடிக்கணினியில் வேலை செய்து கொண்டே கழிக்க வேண்டியதாகிவிட்டது. இம்முறை பழையபடி தொலைக்காட்சியுடனும் வீட்டாருடனும் இனிதாய் கழிந்தது.

காலம் உருண்டோட நண்பர்கள் எல்லாம் தொலைவாகி விட்டார்கள்.மீண்டும் அவர்களுடன் ஒரு அருமையான புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் ஆவலுடன் 2009ல் பயணிக்க தொடங்குகிறேன்.

மீண்டும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்